"டி20 போட்டியில் 24 பந்து வீசணும் ஆனா பயிற்சியில்..".. உடற்தகுதி பயிற்சி குறித்து கவாஸ்கர் ஆவேசம்
"டி20 போட்டியில் 24 பந்து வீசணும் ஆனா பயிற்சியில்..".. உடற்தகுதி பயிற்சி குறித்து கவாஸ்கர் ஆவேசம்
மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அடிக்கடி காயங்கள் ஏற்பட்டு வரும் நிலையில் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வீரர்களின் உடற்தகுதி மற்றும் பயிற்சி முறைகளில் தவறு இருப்பதாக கூறி இருக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சாய் சுதர்சன் மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைந்ததால் இலங்கை டெஸ்ட் தொடருக்கான அணித் தேர்வில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. வீரர்கள் முதலில் அணியில் அறிவிக்கப்பட்டு பின்னர் நீக்கப்பட்டனர்.
இது பற்றி கவாஸ்கர் எழுதியுள்ள கட்டுரையில், "பும்ராவுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு தொடை தசை நார் காயமே மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது. வீரர்களின் உடற்பயிற்சி மற்றும் பயிற்சி முறைகளில் ஏதோ பெரிய தவறு இருக்கிறது என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இதனால் தான் இந்த காயங்கள் தொடர்ந்து வருகின்றன. வீரர்கள் ஜிம்மில் உடற்தகுதியுடன் இருப்பதை விட, போட்டிகளில் விளையாட தகுதியுடன் இருப்பதுதான் மிக முக்கியம்." என்று குறிப்பிட்டுள்ளார் கவாஸ்கர்.
பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி பிசியோதெரபிஸ்டுகள் மீது பழி போடக் கூடாது எனவும் கவாஸ்கர் கூறி இருக்கிறார். "பயிற்சியின் போது பந்துவீச்சாளர்கள் இவ்வளவு பந்துகள் மட்டுமே வீச வேண்டும் என்ற பயோமெக்கானிக்ஸ் விதிகள் கேள்விக்குரியவை. ஐபிஎல் தொடரில் கூட சில வெளிநாட்டு பிசியோக்கள், பந்துவீச்சாளர்களை வலைப் பயிற்சியில் 20 பந்துகளுக்கு மேல் வீச அனுமதிப்பதில்லை எனத் தெரிகிறது. ஒரு போட்டியில் நோ-பால், வைடு வீசாமல் இருந்தாலே 24 பந்துகள் வீச வேண்டியிருக்கும் போது, பயிற்சியில் அதைவிடக் குறைவாக பந்துவீசுவது எவ்வாறு உதவும்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை ஆகிய முக்கிய தொடர்களுக்கு இந்திய அணி தயாராகி வரும் வேளையில், பும்ரா, பாண்டியா போன்ற வீரர்களின் காயங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி வருகின்றன. இந்த காயங்கள் ஏன் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன என்பது குறித்து பிசிசிஐ தீவிரமாக ஆராய வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.