இரு அமைச்சர்களால் விஜய்க்கு சிக்கல்?
புதுடில்லி: தமிழக முதல்வர் விஜய்க்கு, இரு அமைச்சர்களால் சிக்கல் வரும் என, டில்லியில் பேசப்படுகிறது. இந்த இரு அமைச்சர்களும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இப்போதே ஆரம்பித்து விட்டது; இன்னொருவரோ மத்திய அரசையும், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமைச்சர் அமித் ஷாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த இருவரையும் மத்திய உளவுத் துறை கண்காணிப்பதாக சொல்லப்படுகிறது.
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அந்த அமைச்சரை பற்றி டில்லி அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும். சமீபத்தில், தமிழக முதல்வர் விஜயை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர், 'அந்த அமைச்சரிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்; அவர் ஊழல் பேர்வழி' என, எச்சரித்தாராம்.
இன்னொரு தமிழக அமைச்சர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே உள்ள சுமுகமான உறவை சீர்குலைக்கும் வகையில் பேசி வருகிறார். அத்துடன், 'இவர் பேசுவது பிரிவினையை ஆதரிப்பதாக உள்ளது. இது, நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு நல்லதல்ல' என, உளவுத்துறை அறிக்கை அனுப்பியுள்ளதாம்.
'தமிழக அரசுக்கு நிதி விவகாரத்தில் உதவ மத்திய அரசு தயாராக உள்ளது' என, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் ஏற்கனவே உறுதி அளித்துள்ள நிலையில், இந்த தமிழக அமைச்சர் ஏன் இப்படி பேசுகிறார்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் வருத்தப்படுகின்றனர்.