உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. இந்தியாவின் திரிஷா, காயத்திரிக்கு வெண்கலம்.. 15 ஆண்டு காத்திருப்புக்கு முடிவு
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்.. இந்தியாவின் திரிஷா, காயத்திரிக்கு வெண்கலம்.. 15 ஆண்டு காத்திருப்புக்கு முடிவு
டெல்லி: BWF உலக சாம்பியன்ஷிப் 2026 தொடரின் மகளிர் இரட்டையர் அரையிறுதியில், இந்தியாவின் த்ரிசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிநாத் ஜோடி வெண்கலப் பதக்கத்துடன் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், உலகின் நம்பர் 1 ஜோடியும் நடப்பு சாம்பியனுமான சீனாவின் லியு ஷெங் ஷு மற்றும் டான் நிங் இணையிடம் போராடி இந்திய ஜோடி தோல்வி கண்டது.
தரவரிசையில் இடம் பெறாத த்ரிசா-காயத்ரி ஜோடி, இப்போட்டியை மிகச் சிறப்பாகத் தொடங்கி முதல் கேமை தன்வசப்படுத்தியது. எனினும், உலகின் முன்னணி சீன ஜோடிக்கு எதிராகத் தொடர்ந்து அழுத்தத்தைத் தக்கவைக்க முடியாமல் 21-18, 13-21, 8-21 என்ற புள்ளி கணக்கில் 1 மணிநேரம் 11 நிமிடங்களில் ஆட்டத்தை இழந்தது. இதன் மூலம் அவர்கள் வெண்கலப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா கடைசியாக 2011 இல் லண்டனில் பதக்கம் வென்றிருந்தது. அப்போது ஜ்வாலா குட்டா மற்றும் அஸ்வினி பொன்னப்பா ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது. தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிசா - காயத்ரி ஜோடி வெண்கலம் வென்று சாதனை பெற்றுள்ளது. உலக சாம்பியன்ஷிப்பின் ஒவ்வொரு தொடரிலும் இந்தியா தொடர்ந்து பதக்கம் வெல்லும் வழக்கத்தையும் இந்த ஜோடி இதன் மூலம் காப்பாற்றியுள்ளது.
முதல் கேமில் த்ரிசாவின் சிறப்பான ஆட்டத்தினால் இந்திய ஜோடி 21-18 என முன்னிலை பெற்றது. எனினும், இரண்டாவது கேமில் சீன ஜோடி வலுவாக மீண்டெழுந்து 21-13 என்ற கணக்கில் கேமைக் கைப்பற்றியது. வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது கேமில் சீன ஜோடி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி, இடைவேளையின் போது 11-5 என முன்னிலை பெற்றது. இறுதியில் 21-8 என்ற கணக்கில் ஆட்டத்தை முடித்து சீன ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட கணுக்கால் காயத்தினால் சில வாரங்கள் ஓய்வில் இருந்த த்ரிசா, காயத்ரியுடன் இணைந்து இத்தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். காலிறுதி ஆட்டத்தில் உலகின் 4-ம் நிலை ஜோடியான சீனாவின் ஜியா யி ஃபான் மற்றும் ஜாங் ஷு சியான் இணையை 16-21, 21-15, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்திருந்தனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் அகானே யமகுச்சி, தாய்லாந்தின் போர்ன்பாவி சோச்சுவாங்கை 21-12, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் நாட்டின் அலெக்ஸ் லனியர், கனடாவின் விக்டர் லாயை 16-21, 21-13, 21-14 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.