மேகதாது அணை திட்டத்திற்காக 8.90 லட்சம் மரங்களை வெட்ட கர்நாடக அரசு திட்டம்
பெங்களூரு நகர குடிநீர் தேவை மற்றும் 400 மெகாவாட் மின்சார உற்பத்திக்காக 64 டிஎம்சி கொள்ளளவில் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில், மேகதாதுவில் புதிதாக அணையை கட்ட கர்நாடகா தீவிரம் காட்டி வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்காக, சுமார் 8.90 லட்சம் (9 லட்சம்) மரங்களை வெட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாது வில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 67.14 டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய அணையை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேகேதாது அணை திட்டத்துக்கான முதற்கட்ட திட்ட வரைவு அறிக்கையை கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு மத்திய நீர் ஆணையத்திடம் தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து 2019-ம் ஆண்டு விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த சில தகவல்கள் காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருந்ததால், அவற்றை திருத்தி மீண்டும் தாக்கல் செய்யுமாறு மத்திய நீர் ஆணையம் அறிவுறுத்தியது.
காவிரி வழக்கு
இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசு கடந்த ஏப்ரல் மாதம் திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. ஆனால், அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்கள் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக கூறி, கடந்த ஜூன் 29-ம் தேதி அறிக்கையை கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் திருப்பி அனுப்பியது.இந்த நிலையில், திருப்பி அனுப்பப்பட்ட அறிக்கையில் சில திருத்தங்களை மேற்கொண்ட கர்நாடக அரசு, அதனை மீண்டும் மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
400 மெகாவாட் மின்சாரம்