உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற என்ன செய்ய வேண்டும்? எத்தனை வெற்றி தேவை?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெற என்ன செய்ய வேண்டும்? எத்தனை வெற்றி தேவை?
மும்பை: 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025-27) தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது மிகவும் கடினமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்து இருந்தது. அதற்கு முன் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு தோல்விகள் மற்றும் ஒரு டிரா செய்து இருந்தது. அதனால் இந்திய அணிக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், இனி விளையாடவுள்ள 7 டெஸ்ட் போட்டிகளும் இந்திய அணிக்கு 'வாழ்வா சாவா' போராட்டமாக மாறவுள்ளது.
தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வி மற்றும் 1 டிராவுடன் 48.15 சதவீத புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அடுத்து இலங்கைக்கு எதிராக நடைபெற உள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு முக்கியமானதாகும்.
இலங்கை டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால், அதன் புள்ளிகள் சதவீதம் 57.58 ஆக உயரும். ஒரு போட்டியை மட்டும் வென்றால் அது 53.33 சதவீதமாக இருக்கும். தற்போது ஆஸ்திரேலியா (87.50%), தென்னாப்பிரிக்கா (75.00%), நியூசிலாந்து (72.22%) ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனால் இலங்கை தொடரை வென்றாலும் இந்தியா உடனே முதல் மூன்று இடங்களுக்குள் நுழைய முடியாது.
ஆனால், 6வது இடத்தில் உள்ள இலங்கையை (41.67%) வீழ்த்துவது இந்தியாவின் வாய்ப்பை பலப்படுத்தும். அதன் பின்னர் இறுதிப்போட்டிக்குச் செல்ல மீதமுள்ள 7 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளிலாவது இந்தியா வென்றாக வேண்டும். இலங்கைக்கு எதிரான 2-0 வென்றால், அடுத்து அக்டோபரில் நியூசிலாந்தில் 2-0 எனவும், சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் 4-1 எனவும் இந்தியா வென்றால், புள்ளிகள் சதவீதம் 70ஐ எட்டும். இது இறுதிப்போட்டி வாய்ப்பை ஓரளவு உறுதி செய்யும். எனினும் பிற அணிகளின் வெற்றி, தோல்விகளையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி, தோல்வி மட்டுமின்றி மைதானத்தில் வீரர்கள் காட்டும் ஒழுக்கமும் முக்கிய பங்கு வகிக்கிறது. மெதுவான பந்துவீச்சு (Slow over rate) விதியின் காரணமாக ஒரு புள்ளி குறைந்தாலும் அது தகுதி பெறும் வாய்ப்பைப் பாதிக்கும். எனவே, இந்திய அணிக்கு இனி வரும் ஒவ்வொரு போட்டி மட்டுமல்ல, ஒவ்வொரு ஓவருக்கான நேரமும் கூட முக்கியமானது.