விண்வெளி வணிகத்தில் சீனாவை இந்தியா முந்தும் மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை
சென்னை: ''உலக விண்வெளி வணிகத்தில், முன்னணியில் இருக்கும் சீனாவை, இந்தியா விரைவில் முந் தும்,'' என, சந்திரயான் - 1 திட்டம் மற்றும் இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
அவர், தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி:
உலகத்தின் விண்வெளி தேவைக்கு ஏற்ப, இஸ்ரோ தன்னை புதிதாக கட்டமைத்து வருகிறது. இது, காலத்தின் தேவை. அதன் முன்னோட்டமாக, எஸ்.எஸ்.எல்.வி., எனும் சிறு செயற்கைக்கோள் ஏவும் தொழில்நுட்பத்தை, தனியார் நிறுவனங்களுக்கு மாற்றி உள்ளது.
இதன் வாயிலாக, 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், அக்னிகூல் காஸ்மோஸ்' உள்ளிட்ட தனியார் நிறுவனங்களால், சிறு செயற்கைக்கோள்களை எளிதாகவும், விரைவாகவும் விண்ணில் ஏவ முடியும்.
உலகளவிலான விண்வெளி வணிகத்தில், நம் நாட்டின் பங்கு 2 சதவீதம் மட்டும்தான். இனி, தனியார் துறைகளின் பங்களிப்பால், அதன் வளர்ச்சி 10 சதவீதமாக உயரும்.
சர்வதேச அளவில், விண்வெளி வணிகத்தில் முன்னிலை வகிக்கும் நாடாக சீனா உள்ளது. தற்போது, அதன் நிலையில் இருந்து விலகி உள்ளது. அதனால், அமெரிக்காவின் 'ஸ்பேஸ் எக்ஸ்' போன்ற தனியார் நிறுவனங்களை சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
குலசேகரன்பட்டினம் ஏவுதளம் முழுமையாக செயல்படும் போது, இரண்டு வாரங்களுக்கு ஒரு செயற்கைக்கோளை ஏவ முடியும். விண்வெளியில் ஏற்கனவே பல சிறு செயற்கைக்கோள் கூட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.
அவற்றின் ஆயுட்காலம் முடியும்போது, அதற்கு மாற்றாக, புதிய செயற்கைக் கோளை ஏவ வேண்டிய தேவை ஏற்படும்.
அதற்கான இடத்தை, இன்னும் ஓரிரு ஆண்டு களில் இந்தியா பிடிக்கும். அப்போது, அமெரிக்கா வுக்கு பதில், மாற்று வழியை தேடும் நாடுகளுக்கு, இந்தியா ஒரு வலுவான, நம்பிக்கையான தேர்வாக மாறும்.
அப்போது, விண்வெளி வணிகத்தில் சீனாவை இந்தியா முந்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.