10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: சென்னை, செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில், நாளை (ஆகஸ்ட் 23) இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக, இன்று செங்கல்பட்டு மாவட்டம், வி.ஐ.டி., கல்வி நிறுவன பகுதியில், 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், சென்னை சோழிங்கநல்லுார், ராணிப்பேட்டை பகுதிகளில், தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழக கடலோர பகுதிகளில், கீழ்மட்ட வளி மண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் ஆகிய மாவட்டங்களில், நாளை (ஆகஸ்ட் 23 ) இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை மறுநாள் (ஆகஸ்ட் 24) கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார், அரியலுார், பெரம்பலுார், மயிலாடுதுறை, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில், இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரையில், ஜூன் 1 முதல், ஆக., 22 வரையிலான காலக்கட்டத்தில், 15 செ.மீ., மழை பெய்துள்ளது. இந்த காலக்கட்டத்தின் இயல்பான அளவு, 18 செ.மீட்டர். அதாவது, இயல்பை விட, 17 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.