சென்னை: பெண்ணின் உடல் பாகங்களை பிரியாணி போல சமைத்த தம்பதி
சென்னை: பெண்ணின் உடல் பாகங்களை பிரியாணி போல சமைத்த தம்பதி - பூட்டிய வீட்டுக்குள் பேரதிர்ச்சி!
கூடுவாஞ்சேரியில் பூட்டிய வீட்டுக்குள் பெண்ணின் உடல் பாகங்களை பிரியாணி போல சமைத்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது.
சென்னை சென்ட்ரலிருந்து கடந்த 5-ம் தேதி டெல்லி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஆக்ரா ரயில் நிலையத்துக்குச் சென்ற போது முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டியிலிருந்து தூர்நாற்றம் வீசுவதாக பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆக்ரா ரயில்வே போலீஸார், சம்பந்தப்பட்ட ரயில் பெட்டியை சோதனை செய்தபோது அநாதையாக கிடந்த சூட்கேஸ் ஒன்றில் பெண்ணின் தலையில்லாத உடல் பாகங்கள் இருந்தன. அதை மீட்ட போலீஸார், விசாரணையை தொடங்கினர். அப்போது உடல் பாகங்களை சுற்றி வைத்திருந்த பிளாஸ்டிக் கவர் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தின் பை எனத் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து சென்னை ரயில்வே போலீஸாரின் உதவியை ஆக்ரா போலீஸார் நாடினர். இதையடுத்து சென்னை ரயில்வே போலீஸார், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கண்ணாடி போட்ட இளம்பெண் ஒருவரும் குறுந்தாடி வைத்த இளைஞரும் சேர்ந்து ரயில் பெட்டியில் பெண்ணின் உடல் பாகங்கள் இருந்த சூட்கேஸை வைத்துவிட்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்த போது அவர்கள் கூடுவாஞ்சேரியிலிருந்து கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் சி.சி.டி.வி காட்சிகளும் கிடைத்தன. இதையடுத்து சென்னையில் மாயமான பெண்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் நிஷா என்ற பெண்ணைக் காணவில்லை என அவரின் மகன் யூசுப்கான் என்பவர் புகாரளித்திருந்தார்.
அதனால் நிஷா குறித்த தகவலை கூடுவாஞ்சேரி போலீஸார் சேகரித்தபோது அவர் தங்கியிருந்த வீடு பத்து நாள்களுக்கு மேல் பூட்டியிருந்தது தெரியவந்தது. இதற்கிடையில் அந்த வீட்டுக்குள் இருந்து தூர்நாற்றம் வீசுவதாக கூடுவாஞ்சேரி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீஸார் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. டபரா ஒன்றில் பெண்ணின் சில உடல் பாகங்கள் வேக வைக்கப்பட்டிருந்தன. அதோடு காய்கறிகளும் மாவு போன்ற உணவு பொருளும் சேர்க்கப்பட்டிருந்தன. பிரியாணி போல இருந்த அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது நிஷாவுடன் சில தினங்களுக்கு முன்பு ஒரு இளம் ஜோடி தங்கியிருந்த தகவல் தெரியவந்தது. அவர்களை தன்னுடைய தம்பி, தம்பியின் மனைவி என்று நிஷா, தெரிவித்திருக்கிறார். இதையடுத்து ரயில் நிலையத்தில் கிடைத்த கண்ணாடி போட்ட இளம்பெண், குறுந்தாடி வைத்திருந்த இளைஞரின் சி.சி.டி.வி பதிவுகளை நிஷாவின் வீட்டின் அருகில் வசிப்பவர்களிடம் போலீஸார் காண்பித்து விசாரித்தனர். அதைப்பார்த்தவர்கள், இந்த ஜோடிதான் நிஷாவின் வீட்டில் தங்கியிருந்தார்கள் என்ற தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து அந்த ஜோடியை கூடுவாஞ்சேரி போலீஸார் தேடிவருகிறார்கள்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட பெண், நிஷா என்பதை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. மேலும் ஆக்ரா ரயில் நிலையத்தில் கிடைத்த சூட்கேஸிலிருந்த பெண்ணின் உடல் பாகங்களும் தற்போது கூடுவாஞ்சேரி வீட்டில் கிடைத்த பெண்ணின் உடல் பாகங்களும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதுதொடர்பாக ஆக்ரா ரயில்வே போலீஸாரிடம் விசாரித்து வருகிறோம். இதற்கிடையில் நிஷா குறித்து அவரின் மகன் யூசுப்கானிடமும் விசாரித்தபோது பல ஆண்டுகளுக்கு முன்பு ஓடிசாவைச் சேர்ந்த நிஷா, சென்னையைச் சேர்ந்த தன்னுடைய தந்தையை திருமணம் செய்த தகவல் கிடைத்தது. அதன்பிறகு கணவரைப் பிரிந்த நிஷா, மகன் யூசுப்கானுடன் வசித்து வந்திருக்கிறார். அப்போது அம்மாவுக்கும் மகனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துச் சென்றுவிட்டனர். தனியாக வசித்து வந்த நிஷாவை காணவில்லை.
நிஷாவின் வீட்டில் தங்கியிருந்த ஜோடி சிக்கிய பிறகுதான் உண்மை தெரியவரும். அதுவரை எந்த தகவலையும் உறுதியாக சொல்ல முடியாது. மேலும் நிஷாவின் வீட்டில் டபராவில் பிரியாணி போல பெண்ணின் உடல் பாகங்கள் வேக வைக்கப்பட்டிருக்கின்றன. தூர்நாற்றம் வீசாமலிருக்க டபராவை மூடி அதைச் சுற்றி மாவுபோல தடவி வைத்திருக்கிறார்கள். அந்த வீட்டை சல்லடை போட்டு தேடியதில் சில தடயங்கள் கிடைத்திருக்கின்றன. விரைவில் இந்தக் கொலையில் புதிய தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறோம்'' என்றனர்.