11 பந்தில் அரைசதம்.. 5 சிக்ஸ், 5 பவுண்டரி.. உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி.. இலங்கைக்கு ஆப்பு!
11 பந்தில் அரைசதம்.. 5 சிக்ஸ், 5 பவுண்டரி.. உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி.. இலங்கைக்கு ஆப்பு!
தம்புலா: இலங்கை ஏ அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய ஏ அணியின் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி 11 பந்துகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 5 சிக்ஸ், 5 பவுண்டரிகளை விளாசிய வைபவ் சூர்யவன்ஷி, லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை ஏ அணியை எதிர்த்து இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை ஏ அணியின் கேப்டன் சஹன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய ஏ அணிக்காக பிரியன்ஷ் ஆர்யா - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசிய வைபவ் சூர்யவன்ஷு, 3வது ஓவரிலேயே உச்சக்கட்ட அதிரடிக்கு திரும்பினார். முகமது சிராஸ் வீசிய 3வது ஓவரில் 4, 6, 6 , 0, 6, 4 என்று 26 ரன்களை விளாசி தள்ளினார். இதன்பின் 4வது ஓவரிலேயே 4, 6, 6 என்று விளாசி 11 பந்துகளில் 5 சிக்ஸ், 5 பவுண்டரி உட்பட அரைசதத்தை எட்டினார். வைபவ் சூர்யவன்ஷியின் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதமாக இந்த இன்னிங்ஸ் அமைந்துள்ளது. இதற்கு முன்பாக லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்து வந்தது. 2015ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் குசால் பெரேரா 12 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
இந்த சாதனையை இலங்கை அணிக்கு எதிரான 11 பந்துகளில் அரைசதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி சாதனை படைத்திருக்கிறார். 15 வயதில் இவ்வளவு பெரிய சாதனை வைபவ் சூர்யவன்ஷி படைத்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக இலங்கை ஏ அணியுடன் இந்திய ஏ அணி விளையாடிய போது, அந்த அணி வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷியை ஸ்லெட்ஜிங் செய்து வம்பிழுத்தனர்.
இதனால் ஆக்ரோஷம் அடைந்த வைபவ் சூர்யவன்ஷி நேரடியாக இலங்கை அணியின் விஷன் ஹலம்பாகேயை தள்ளிவிட்டு அட்டாக் செய்தார். இதனால் வைபவ் சூர்யவன்ஷி மீது விமர்சனங்கள் எழுந்தது. அந்த சம்பவத்திற்கு பதிலடியாக வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்தில் இருந்தே அட்டாக் செய்து சம்பவம் செய்துள்ளார்.