2027 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்.. ரஷீத் கான் ஆட்டத்தால் அயர்லாந்து போட்டியில் வெற்றி
2027 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற ஆப்கானிஸ்தான்.. ரஷீத் கான் ஆட்டத்தால் அயர்லாந்து போட்டியில் வெற்றி
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், வரும் 2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு ஆப்கானிஸ்தான் நேரடியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 206 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், ஏஎம் கசன்ஃபர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அயர்லாந்து தரப்பில் அதிகபட்சமாக கவின் ஹோய் 36 ரன்களும், ஜெய் முந்த்ரா 31 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் அரைசதம் அடித்து நல்ல தொடக்கம் தந்தார். ஆனால், அயர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் கவின் ஹோய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் 97 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்த ஆப்கானிஸ்தான், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களுக்கு 7 விக்கெட் என இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.
கடைசி நேரத்தில் களத்தில் நின்ற நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரஷித் கான் பொறுப்புடன் விளையாடினார். அவர் 43 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 44.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டி மழையால் ரத்தானது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி தரவரிசையில் எட்டாம் இடத்தை உறுதி செய்தது.
இதன் மூலம் 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு ஆப்கானிஸ்தான் அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 4வது முறையாக உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது. தற்போது அந்த அணி தகுதிச் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.