📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 31, 2026 03:03 PM

57 ஆண்டு ரெக்கார்டை உடைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. துலீப் டிராபியில் சாதித்துக் காட்டினார்

57 ஆண்டு ரெக்கார்டை உடைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. துலீப் டிராபியில் சாதித்துக் காட்டினார்

57 ஆண்டு ரெக்கார்டை உடைத்த 15 வயது வைபவ் சூர்யவன்ஷி.. துலீப் டிராபியில் சாதித்துக் காட்டினார்

பெங்களூர்: துலீப் டிராபி கிரிக்கெட் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அரைசதம் விளாசி, 57 ஆண்டுகால சாதனையைத் தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளார் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. பெங்களூருவில் நடைபெற்ற மத்திய மண்டல அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

கிழக்கு மண்டல அணியின் தொடக்க வீரராகக் களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடி வெறும் 42 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். சிக்ஸர் அடித்து அவர் இந்த மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 15 ஆண்டுகள் 175 நாட்கள் வயதில் துலீப் டிராபியில் அரைசதம் அடித்த மிக இளைய வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, கடந்த 1969 ஆம் ஆண்டில் லக்ஷ்மண் சிங் (16 வயது 23 நாட்கள்) படைத்த சாதனையே துலீப் டிராபியில் மிக இளைய வயது அரைசதமாக இருந்தது. தற்போது அந்த 57 ஆண்டுகால சாதனையை வைபவ் முறியடித்துள்ளார். இந்தப் பட்டியலில் பியூஷ் சாவ்லா (16 வயது 307 நாட்கள்) 3-வது இடத்தில் உள்ளார்.

முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் நாளான நேற்று, கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷனுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டதால், வைபவ் சூர்யவன்ஷி சுமார் ஒரு மணி நேரம் தற்காலிக கேப்டனாகவும் அணியை வழிநடத்தி அசத்தினார். அதேபோல், வைபவ் காலி இறுதி ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி கிழக்கு மண்டல அணியின் வெற்றிக்கு உதவினார். அவர் வீசிய சுழலில் கிஷான் லிங்டோ (25) மற்றும் இம்லிவாதி லெம்தூர் (4) ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றியிருந்தார்.

பேட்டிங், பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி என அனைத்திலும் 15 வயதிலேயே அசத்தி வரும் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். இந்தப் போட்டியில் 92 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்களில் முதல் முதல்தர போட்டி சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டார்.