அ.தி.மு.க.,
- நமது நிருபர் -
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரிடம், த.வெ.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வரும் தகவல் வெளியாகி உள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜெயகுமார், இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் ஆகிய ஆறு எம்.எல்.ஏ.,க்கள், பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.,வுக்கு தாவினர்.
அவர்களுக்கு தற்போது ஆளும் த.வெ.க.,வில், துணை பொதுச்செயலர், மாவட்ட செயலர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மேலும் சில அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம், த.வெ.க., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: த.வெ.க.,வுக்கு தாவிய ஆறு பேருக்கும் கட்சி பொறுப்புகள் வழங்கியதோடு, இடைத்தேர்தலில் மீண்டும் வாய்ப்பு தருவதாக உறுதி தரப்பட்டுள்ளது. சட்டரீதியாக, ஆறு பேரையும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியால் எதுவுமே செய்ய முடியவில்லை. இதனால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு, த.வெ.க.,வில் சேரும் ஆசை அதிகமாகி உள்ளது.
இதற்கிடையே, த.வெ.க., அரசுக்கு ஆதரவு தரும் கூட்டணி கட்சிகளும் அதிருப்தியாகி வருகின்றன. குறிப்பாக, கம்யூனிஸ்ட் கட்சிகள், எந்த நேரத்திலும் ஆதரவை வாபஸ் பெறலாம். இதனால், கூடுதல் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்து, த.வெ.க., வெற்றி பெற்றால்தான், ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலை எழுந்துள்ளது.
எனவே, தனி தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் இருவர் உட்பட, ஐந்து அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களிடம் பேச்சு நடக்கிறது. சீக்கிரமே வந்தால் தான், த.வெ.க.,வினருடன் இணைந்து செயல்பட முடியும் என கூறப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின், ஐந்து அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க., பக்கம் வர வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.