ஆசிய போட்டி 2026: ஸ்ரேயாஸ், பும்ரா வேண்டாம்.. இந்திய பி அணியை அனுப்ப பிசிசிஐ திட்டம்.. காரணம் என்ன?
ஆசிய போட்டி 2026: ஸ்ரேயாஸ், பும்ரா வேண்டாம்.. இந்திய பி அணியை அனுப்ப பிசிசிஐ திட்டம்.. காரணம் என்ன?
மும்பை: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள போதிய வசதிகள் மற்றும் தங்குமிட ஏற்பாடுகள் குறித்து அதிருப்தி எழுந்துள்ளதால், இந்தியா தனது பி கிரிக்கெட் அணியை அங்கு அனுப்பக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசிய விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் 19 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஆடவர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3 வரையிலும், மகளிர் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் 17 முதல் 22 வரையிலும் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், பிசிசிஐ தரப்பிலிருந்து கிடைத்த தகவலின்படி, ஜப்பானில் உள்ள விளையாட்டு அரங்கம் மற்றும் தங்குமிட வசதிகள் குறித்து பிசிசிஐ மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆகியவை கவலை தெரிவித்துள்ளன. இறுதியான முடிவை எடுப்பதற்கு முன், ஏற்பாடுகளை நேரில் மதிப்பீடு செய்ய பிசிசிஐ ஒரு கண்காணிப்பாளரை ஜப்பானுக்கு அனுப்ப உள்ளது.
"பிசிசிஐ மற்றும் ஏசிசி ஆகியவை ஜப்பானில் உள்ள வசதிகள் மற்றும் ஏற்பாடுகளில் திருப்தி அடையவில்லை. எனவே, வாரியம் அங்கு ஒரு கண்காணிப்பாளரை அனுப்பும். அவர் சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஏற்பாடுகள் தகுந்த தரத்தில் இல்லாதபட்சத்தில், அங்கு 'பி' அணியை அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும்" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
"ஏசிசி கூட்டத்தின் போது, ஜப்பான் ஒலிம்பிக் அதிகாரிகளிடம் வீரர்களுக்கான உடை மாற்றும் அறைகள் தற்காலிக கூடாரங்களில் அமைக்கப்பட்டுள்ளது குறித்தும், கழிவறைகள் அதிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது குறித்தும் சுட்டிக்காட்டினோம். இது வீரர்களுக்கு திருப்தியற்ற சூழலை உருவாக்கியுள்ளது. அதோடு, தங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள ஹோட்டல் அறைகளும் மிகவும் சிறியதாக உள்ளன, இது ஒரு முக்கிய கவலையாக உள்ளது" என்றும் தகவவ் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னதாக, சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்ற 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணி நடப்பு சாம்பியனாக களமிறங்குகிறது. அப்போது மழை காரணமாக ஆடவர் இறுதிப் போட்டி ரத்து செய்யப்பட்டதால், ஆப்கானிஸ்தானை விட சிறந்த தரவரிசை புள்ளிகளைப் பெற்றிருந்ததன் அடிப்படையில் இந்தியாவிற்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இந்திய ஆடவர் அணி மிகவும் வலிமையான ஒன்றாக இருந்தது. இதில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், துணை கேப்டன் திலக் வர்மா, இளம் பேட்ஸ்மேன்கள் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் மற்றும் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். மகளிர் பிரிவிலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா மற்றும் ரேணுகா தாக்கூர் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். ஒருவேளை வசதிகள் திருப்திகரமாக இல்லாத பட்சத்தில், இந்த முன்னணி வீரர்களுக்கு பதிலாக இரண்டாம் கட்ட அணி அனுப்பப்படலாம்.