ஆதவ் வாய திறந்தாலே சண்ட வருது... டென்ஷனில் கொந்தளித்த அண்ணியார்..!
ஆதவ் வாய திறந்தாலே சண்ட வருது... டென்ஷனில் கொந்தளித்த அண்ணியார்..!
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ ராஜாவுக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கும் இடையே ஏற்பட்ட காரசார வாக்குவாதத்தைக் கண்டித்த பிரேமலதா விஜயகாந்த், “இது சட்டமன்றமா, சண்டை மன்றமா?” என கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சமூகநீதி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
விவாதத்தின்போது திமுக எம்.எல்.ஏ. ராஜா, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடர்பாக சில கருத்துகளைத் தெரிவித்தார். இதற்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு பதிலளித்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அப்போது குறுக்கிட்ட தேமுதிக எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவையில் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “இது சட்டமன்றமா அல்லது சண்டை மன்றமா? இங்கு நடக்கும் சண்டைகளால் மக்களுக்கு என்ன பயன்?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், கடந்த சில நாட்களாக சட்டப்பேரவை நடவடிக்கைகளை கவனித்து வருவதாகக் கூறிய அவர், மானியக் கோரிக்கை விவாதங்களைத் தவிர பிற விவகாரங்களிலேயே அதிக நேரம் செலவிடப்படுவதாகக் குற்றம்சாட்டினார். மக்களுக்குப் பயனளிக்கும் முக்கியமான விவாதங்களுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, ஒருவரை ஒருவர் குறை கூறுவதற்காக சட்டமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது எனக் கூறிய பிரேமலதா விஜயகாந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசும்போதெல்லாம் பிரச்சினை ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். எனவே, அவருக்கு பேச அனுமதி வழங்கக் கூடாது என சபாநாயகரிடம் அவர் வலியுறுத்தினார்.