அசாமி மொழியில் தமிழ் இலக்கியங்கள் மொழிபெயர்ப்பு: துணை ஜனாதிபதி வரவேற்பு
கவுகாத்தி: அசாமி இலக்கியங்களை தமிழிலும், தமிழ் இலக்கியங்களை அசாமி மொழியிலும் மொழி பெயர்ப்பது வரவேற்கத்தக்கது என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அசாமின் கவுகாத்தியில் 110 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
இதன் பிறகு அவர் பேசியதாவது: அசாமி இலக்கியங்களை தமிழிலும், தமிழ் இலக்கியங்களை அசாமி மொழியிலும் மொழி பெயர்ப்பது வரவேற்கத்த்கது. அசாம் மற்றும் தமிழகம் இடையே பரந்த கல்வி மற்றும் இலக்கிய கல்வி பரிமாற்றங்களை நடப்பது ஊக்கவிக்க வேண்டும். இதனால், இந்தியாவின் மொழிப்பன்முகத்தன்மை மற்றும் கலாசார ஒற்றுமையால் செழுமை அடைகிறது.
கவுகாத்தி பல்கலை என்பது வடகிழக்கு மாநிலத்தில் உள்ள மிகப்பழமையானது. விடா முயற்சிக்கும், மக்களின் விருப்பத்திற்கும் உதாரணமாக திகழ்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்புக்கு மட்டும் அல்ல. அது திறனாய்வு சிந்தனைக்கும், புத்தாக்கத்திற்கும் வழிவகுக்க வேண்டும் சமூகங்களில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தலைப்புகளில் கல்வியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் பெரும்பாலான தங்கப் பதக்கம் வென்றவர்கள் பெண்கள். இது அமைதியான புரட்சி. பெண்கள் சக்தியின் எழுச்சியை பாராட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.