அமைச்சர் சம்பளம் குறித்த மேல் விவரங்களை வெளியிட பரிசீலிப்பு
அமைச்சர்களுக்கான சம்பள, செயல்திறன் போனஸ் குறித்த மேலும் பல தகவல்களை, ஏற்கெனவே பகிரப்பட்டதைத் தாண்டி மேலும் தகவல்கள மக்கள் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு வெளியிடுவது குறித்து பரிசீலிப்பதாக பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.
ஆனால், அமைச்சர்களின் மதிப்பீட்டை ஆண்டுதோறும் தனிநபர்களுடன் ஒப்பிடப்பட்டு தரவரிசைப்படுத்தப்படும் செல்வாக்குக்கான போட்டியாக இது மாறக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
வியாழக்கிழமை (செப்டம்பர் 10) அரசியல்வாதிகளின் சம்பள உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் விவாதிக்கப்பட்டது.
அமைச்சர்கள் தனித்தனியாக செயல்படுவதையோ, தங்களின் சொந்தப் பிரச்சினைகளில் மட்டும் குறுகிய கவனம் செலுத்துவதையோ அல்லது தங்களின் சொந்தப் புகழை வளர்த்துக்கொள்வதையோ தாம் விரும்பவில்லை என்று பிரதமர் கூறினார்.
மிகவும் திறமையான அமைச்சராக ஒருவர் இருந்தாலும்கூட அவர் தனியாக வெற்றி பெற முடியாது என்பதையும் அவர் சுட்டினார்.
அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளைத் தாண்டியும் சிந்திக்க வேண்டும் என்றும் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் தான் விரும்புவதாக பிரதமர் வோங் கூறினார்.
“மிக முக்கியமான சில முடிவுகள் பலனளிக்க பல ஆண்டுகள் ஆகலாம், அல்லது இன்று அவை கடினமானதாகவும் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததாகவும் இருக்கலாம். ஆனால் சிங்கப்பூரின் நீண்டகால நலன்களுக்கு அவை அவசியமானவை,” “என்று அவர் குறிப்பிட்டார்.
“இப்போது எது கண்ணுக்குத் தெரிகிறதோ பிரபலமாக இருக்கிறதோ அதை வைத்து மட்டுமே அமைச்சர்கள் மதிப்பிடப்பட்டால், அது தவறான நடத்தையை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அது சிறந்த அரசாங்கத்தை உருவாக்காது,” என்று அவர் கூறினார்.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
இந்த விவாதத்தின் போது, சம்பளக் கட்டமைப்பின் கீழ் அனுமதிக்கப்படும் அதிகபட்ச போனஸ், ‘எம்ஆர்4’ தரத்தில் உள்ள அமைச்சர்கள் பெறும் உண்மையான மொத்த ஊதியம் குறித்த பதில்களைப் பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் வோங் சம்பள வரம்புகளில் அமைச்சர்கள் எந்த நிலையில் உள்ளனர், உள்ளிட்டவற்றில் உள்ள ஆர்வத்தைக் கருத்தில் கொண்டு அமைச்சர்களின் சம்பளம் குறித்த கூடுதல் தகவல்களை பொதுமக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது குறித்து பரிசீலிக்க எண்ணுவதாகக் கூறியுள்ளார்.
குறிப்பிட்ட அமைச்சர்களின் தரநிலைகளையோ அல்லது அவர்களின் செயல்திறன் போனஸ் பற்றியோ தம்மால் தகவல் வெளியிட முடியாது என்றும் அவர் கூறினார்.
“ஆனால் அத்தகைய தகவல்களைப் பரந்த வரம்புகளில் வழங்குவது நியாயமானது என்று நான் நினைக்கிறேன், எதிர்காலத்தில் அத்தகைய தகவல்களை எவ்வாறு வழங்கலாம் என்பதை நாங்கள் கருத்தில் கொண்டு ஆராய்வோம்,” என்று அவர் கூறினார்.
சிவில் சேவையில் (குடிமைப் பணி) முன்பு சம்பாதித்ததை விட, அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணையும் சில அரசு ஊழியர்கள் அதிக சம்பள உயர்வைப் பெற வாய்ப்புள்ளது என்றும் சிங் கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் வோங்“அந்தக் கட்டுக்கதையை நான் போக்க விரும்புகிறேன். அது நடப்பதில்லை. அரசு ஊழியர்கள் அரசியலில் இணையும்போது சம்பள உயர்வு ஏதும் கிடைப்பதில்லை. சில சமயங்களில் அது சம்பளக் குறைப்பாகக் கூட இருக்கிறது,” என்றார்.
சிவில் சேவையிலேயே தங்கி சிறப்பாகச் செயல்படும் அரசு ஊழியர்கள், அரசியலில் சம்பாதிப்பதை விட அதிகமாகச் சம்பாதித்திருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.