அமெரிக்கா உடன் இனி நேரடி பேச்சுவார்த்தை கிடையாது:ஈரான்
டெஹ்ரான்: அமெரிக்கா உடன் நேரடியாக பேச மாட்டோம். மத்தியஸ்தர்கள் வாயிலாகவே பேசுவோம் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ஸி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: அமெரிக்கா - ஈரான் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையை துவக்குவதற்கான நிபந்தனைகளை மத்தியஸ்தர்கள் உருவாக்கி வருகின்றனர். பேச்சுவார்த்தைக்கான சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தத்தை மீறி நடத்தும் தாக்குதலை அமெரிக்கா நிறுத்தாத வரை பேச்சுவார்த்தை மீண்டும் துவக்குவதற்கான சூழல் உருவாகாது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க மாட்டோம். இவ்வாறு அப்பாஸ் அராக்ஸி கூறினார்.
இதனிடையே, ஈரான் பார்லிமென்டின் துணை சபாநாயகர் ஹமித்ரெசா ஹாஜி பபேயி கூறுகையில், எங்கள் நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உதவும் நாடுகள் ஈரானின் ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது எனக்கூறியுள்ளார்.
ஏமனின் மோகா துறைமுகம் மீது ஏவுகணை மற்றும் டிரோன் வாயிலாக ஹவுதிப்படையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேலும் சவுதி அரேபியாவின் ஜஜன் பகுதியில் உள்ள அராம்கோ எண்ணெய் கட்டமைப்பு மீது டிரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அந்த அமைப்பினர் பொறுப்பு ஏற்றுக் கொண்டு உள்ளனர்.