📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics July 24, 2026 05:33 PM

அமமுக MLA காமராஜுக்கு புதிய சிக்கல்

அமமுக MLA காமராஜுக்கு புதிய சிக்கல்

அமமுக MLA காமராஜுக்கு புதிய சிக்கல் - தகுதி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் கட்சி சார்பில் மனு

ஏற்கனவே அதிமுகவில் இருந்து விலகி தவெக அரசுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படும் ராஜினாமா செய்த ஆறு முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான தகுதி நீக்க கோரிக்கை மனுக்கள் பரிசீலனையில் உள்ள நிலையில், தற்போது அமமுக எம்எல்ஏ காமராஜ் மீதும் இதேபோன்ற நடவடிக்கையை கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மன்னார்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காமராஜை தகுதி நீக்கம் செய்யக் கோரி, அக்கட்சி சட்டப்பேரவை சபாநாயகரிடம் அதிகாரப்பூர்வமாக மனு அளித்துள்ளது. தவெக அரசின் நம்பிக்கை தீர்மானத்தின்போது கட்சியின் நிலைப்பாட்டை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் குற்றம்சாட்டியுள்ள அமமுக, கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காமராஜ், நம்பிக்கை தீர்மானத்தின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார். இது கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவுக்கு எதிரானது எனக் கூறிய அமமுக, முதலில் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியது. அதனைத் தொடர்ந்து, அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அமமுக பொருளாளர் கரிகாலன், சட்டப்பேரவை சபாநாயகரை நேரில் சந்தித்து மனுவை வழங்கினார். அந்த மனுவில், கட்சியின் உத்தரவை மீறி செயல்பட்டதன் மூலம் காமராஜ், அரசியலமைப்பின் 10-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள கட்சி தாவல் தடுப்புச் சட்ட விதிகளை மீறியுள்ளதாகவும், எனவே அவரை சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் காமராஜ் இருந்து வருவதால் அவர் மீது உடனடி தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இருப்பினும், இறுதி முடிவு சபாநாயகரின் பரிசீலனைக்குப் பிறகே தெரியவரும்.!