📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Religion August 18, 2026 03:03 AM

காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை; போலீஸ் குவிப்பு; என்ன நடந்தது?

காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை; போலீஸ் குவிப்பு; என்ன நடந்தது?

காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை; போலீஸ் குவிப்பு; என்ன நடந்தது?

காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் நடந்த திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடந்து வருகிறது. முதல் நாள் விழாவில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

அதைத் தொடர்ந்து இரவு சுவாமி வீதியுலா புறப்படத் தயாரானது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் கானா பாடல்களை ஒலிபரப்பக் கோரி தகராறில் ஈடுபட்டனர். அதற்கு அங்கிருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இரண்டு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

இதையடுத்து சந்துரு, விக்கி (எ) நீலகண்டன் ஆகிய இருவர் அந்தப் பகுதியில் உள்ள மைதானத்தில் இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்ப போலீஸார் முயன்றார். அப்போது இளைஞர்களின் உறவினர்கள், போலீஸார் உரிய பாதுகாப்பு அளிக்காததே இந்த இரட்டைக் கொலைக்குக் காரணம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. ஒன்றரை மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு சடலங்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. அரவிந்த் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரித்தார். மேலும் கொலையாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி. அரவிந்த் உத்தரவிட்டார். கோயில் திருவிழா தகராறில் நடந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட நீலகண்டன், வெல்டிங் வேலை செய்து வந்தார். சந்துரு, கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் ஒரு கும்பலுக்கும் இடையே ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தநிலையில் இந்தக் கொலை நடந்திருக்கிறது. அதுதொடர்பாக சிலரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.