அண்ணாமலை டெல்லி பயணம்: பாஜகவில் இருந்து விலகுவதாக தகவல்
கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019ம் ஆண்டு ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025 வரை தமிழக பாஜக தலைவராக செயல்பட்டார்.
பின்னர் தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அண்ணாமலைகு கட்சியில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
பாஜகவில் இருந்து விலகல்?
இந்நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின்போது கட்சி தலைமையிடம் பாஜகவில் இருந்து விலகுவதற்கான விலகல் கடிதத்தை அண்ணாமலை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலைக்கு மத்திய அமைச்சரவையில் மந்திரி பதவி வழங்க பாஜக முன்வந்ததாகவும், அந்த வாய்ப்பை அண்ணாமலை நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை முதலில் இயக்கம் ஒன்றை தொடங்க உள்ளதாகவும், பின்னர் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி செல்வதற்குமுன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன் என்று கூறிவிடு சென்றார்.