📅 Friday, 18 September 2026 IST | புரட்டாசி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 18, 2026 07:33 PM

'அது தவெக-வுக்குச் சாதகமாக முடியும்.!'

'அது தவெக-வுக்குச் சாதகமாக முடியும்.!'

'அது தவெக-வுக்குச் சாதகமாக முடியும்.!'- இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாதது ஏன்? அரசியல் கணக்கு என்ன?

பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாது என்றும் யாருக்கு ஆதரவு என்பதை விரைவில் அறிவிப்போம் என்று அன்புமணி தெரிவித்திருக்கிறார்.

அக்டோபர் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகி இருக்கிறது.

இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளில் மதுராந்தகம் தொகுதியில் வன்னிய சமுதாய ஓட்டுகள் குறிப்பிட்ட அளவில் உள்ளன. அதனால் பாமக ஆதரவை பெறும் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருக்கும் என கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாததற்கு பின் இருக்கும் அரசியல் என்ன? ஆதரவு தெரிவிப்பதில் காலதாமதம் ஏன்? என்ற கேள்விகளுடன் பத்திரிகையாளர் சுவாமிநாதனைத் தொடர்புக்கொண்டு பேசினோம்.

மதுராந்தகத்தில் தவிர்க்க முடியாத சக்தி பாமக

நம்மிடம் பேசிய அவர், " மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் தாராபுரத்தில் பாமகவின் பங்கு எதுவுமில்லை. அங்கு பாமகவின் முதன்மை வாக்காளர்களான வன்னியர் சமூக வாக்குகள் எதுவும் இல்லை.

அன்புமணியின் ஆதரவு எல்லாக் கட்சிக்கும்.!

பொதுவாக அந்தத் தொகுதியின் வரலாறு ஆளுங்கட்சி சார்ந்தே இருக்கும். ஆனால் 2021-ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்தும் அதிமுக வென்றது. 2026-ல் தவெக ஆளுங்கட்சியாக மாறும் சூழலிலும் அதிமுக வெல்கிறது. அதற்கு முக்கியக் காரணம் பாமகவின் வாக்கு வங்கி.

கூட்டணியில் பாமக இருப்பதால் வாக்குகள் சரியாகப் பங்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், 10.5% வன்னியர் இடஒதுக்கீட்டை அதிமுக அரசு கொண்டு வந்ததும் பாமக ஆதரவுக்கு முக்கியக் காரணம். எனவே, மதுராந்தகத்தில் அன்புமணியின் ஆதரவு என்பது எல்லாக் கட்சிக்கும் முதன்மையானது.

தவெகவுடன் நெருக்கம்

அதிமுகவுக்கு பாமக ஆதரவு நிச்சயம் தேவையாக இருக்கிறது. ஆனால், பாமக தரப்பு ஒரு டிமாண்டை உருவாக்க விரும்புகிறது. வட மாவட்டங்களில் பல தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பாமக கூட்டணியே காரணம் எனச் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, உடனே ஆதரவு தராமல் கடைசி நேரத்தில் ஆதரவு தந்தால் உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களைக் கேட்க முடியும் என நினைக்கின்றனர்.

இன்னொரு பக்கம், தவெக தரப்பிலும் பாமகவுக்கு நெருக்கம் காட்டப்படுகிறது. சௌமியா அன்புமணிக்கு முக்கியத்துவம் தருவது, அவரது அப்பாவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது போன்றவை இதற்குச் சான்றாக இருக்கிறது.

அது தவெகவுக்குச் சாதகமாக முடியும்.!

அவர்களையும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனென்றால் ரூலிங் பார்ட்டியாக இருக்கிறார்கள், ஆட்சிப் பங்கு அதிகாரப் பங்கு கொடுத்திருக்கிறார்கள். பாஜக தலையிட்டால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது.

இல்லையெனில், தேர்தலில் நடுநிலை வகிக்கலாம். அது தவெகவுக்குச் சாதகமாக முடியும். திமுக வந்து ஆதரவு கேட்டாலும், திமுகவுக்கு ஆதரவு அளிப்பதால் பாமகவுக்கு அரசியல் ரீதியாக எந்த லாபமும் இல்லை, அதனால் திமுகவுக்கு ஆதரவு கொடுக்க வாய்ப்பு குறைவு" என்று அரசியல் நிலவரத்தை விளக்கினார்.