சென்னையில் ஆடப் போகும் கே எல் ராகுல், படிக்கல், சிராஜ்.. பிசிசிஐ போட்ட உத்தரவு.. என்ன நடந்தது?
சென்னையில் ஆடப் போகும் கே எல் ராகுல், படிக்கல், சிராஜ்.. பிசிசிஐ போட்ட உத்தரவு.. என்ன நடந்தது?
சென்னை: சென்னையில் நடக்க உள்ள 2026 துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தெற்கு மண்டல அணிக்காக களமிறங்க உள்ளனர். சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் செப்டம்பர் 6 முதல் 10 வரை துலீப் கோப்பை இறுதிப் போட்டி நடக்கிறது. இதில் திலக் வர்மா தலைமையிலான தெற்கு மண்டல அணி, இஷான் கிஷன் தலைமையிலான கிழக்கு மண்டல அணியை எதிர்கொள்கிறது.
சமீபத்தில் முடிந்த இலங்கை டெஸ்ட் தொடரில் விளையாடிய கே.எல்.ராகுல், தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் ஆகியோருக்கு செப்டம்பர் மாதத்தில் சர்வதேச போட்டிகள் ஏதும் இல்லை. இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உடற்தகுதியை தக்கவைக்க வேண்டும் என்ற பிசிசிஐ கட்டுப்பாடு இருப்பதால் இந்த மூன்று வீரர்களும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர்.
கர்நாடகாவை சேர்ந்த ராகுல், படிக்கல் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த சிராஜ் ஆகியோர் தெற்கு மண்டல அணிக்கு கூடுதல் பலம் சேர்ப்பார்கள். அரையிறுதியில் நாராயண் ஜெகதீசன், ரிக்கி புய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் இறுதிப் போட்டியில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராகவும், படிக்கல் 3வது இடத்திலும் பேட்டிங் செய்ய உள்ளனர். வேகப்பந்து வீச்சை சிராஜ் தலைமை தாங்கி வழிநடத்துவார்.
அரையிறுதியில் வடக்கு மண்டல அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தெற்கு மண்டலம் உற்சாகத்தில் உள்ளது. அதேநேரம், மத்திய மண்டலத்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய கிழக்கு மண்டல அணியை சர்வதேச டி20 அரங்கில் நம்பர் 1 பேட்டரான இஷான் கிஷன் வழிநடத்துகிறார். அவருடன் முகமது ஷமி, முகேஷ் குமார், அபிமன்யு ஈஸ்வரன், ஆல்-ரவுண்டர் ஷாபாஸ் அகமது மற்றும் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் களமிறங்குகின்றனர்.
இலங்கை டெஸ்ட் தொடரில் 2 சதங்கள் விளாசிய தேவ்தத் படிக்கல், அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை உறுதி செய்ய இந்தப் போட்டியை பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.