சிஎஸ்கே கேப்டன் யார்? ருதுராஜை விட சஞ்சு சாம்சன் செயல்பாடு சூப்பர்.. சடகோபன் ரமேஷ் யோசனை
சிஎஸ்கே கேப்டன் யார்? ருதுராஜை விட சஞ்சு சாம்சன் செயல்பாடு சூப்பர்.. சடகோபன் ரமேஷ் யோசனை
சென்னை: 2027 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கிவிட்டு, சஞ்சு சாம்சனை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் கூறி இருக்கிறார். ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணி, கடந்த 3 சீசன்களாக பிளே-ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் ஏமாற்றம் அளித்து வருகிறது.
தோனிக்கு அடுத்தபடியாக ருதுராஜ் மீது நிர்வாகம் முழு நம்பிக்கை வைத்து இருக்கிறது. ஆனால், அதற்கான பலன் கிடைக்கவில்லை. கடந்த சீசனில் ருதுராஜ் தலைமையில் முழுமையாக களமிறங்கிய சிஎஸ்கே அணி , 10 அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தையே பிடித்தது.
இதற்கிடையே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக நீண்ட காலமாக இருந்த சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியில் இணைந்தார். கடந்த சீசனில் அபாரமாக ஆடிய அவர், 14 போட்டிகளில் 43.36 சராசரி மற்றும் 165.62 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 2 சதங்கள், 1 அரைசதம் உட்பட 477 ரன்கள் விளாசினார். ஆனால் ருதுராஜ் 28.08 சராசரி மற்றும் 123.44 ஸ்ட்ரைக் ரேட்டுடன் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினார்.
இதுகுறித்து யூடியூப்பில் பேசிய சடகோபன் ரமேஷ், "சிஎஸ்கே அணி கேப்டனை மாற்ற நினைத்தால் சஞ்சு சாம்சனை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். அவர் ஒரு சிறந்த அணி வீரர். ராஜஸ்தான் அணியை 66 போட்டிகளில் வழிநடத்தி 33 வெற்றிகளுடன் 50 சதவீத வெற்றி விகிதத்தை வைத்துள்ளார். அவரது தலைமையில் அந்த அணி இறுதிப் போட்டி வரையிலும் சென்றது." என்றார்.
மேலும், நீண்ட காலம் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளதால், புதிய பயிற்சியாளரை நியமிப்பது உட்பட அணியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை சிஎஸ்கே செய்ய வேண்டியுள்ளது. கேப்டனை மாற்றினால் மட்டுமே கோப்பையை வென்றுவிட முடியாது என்றாலும், பழைய பொற்காலத்திற்கு திரும்ப சிஎஸ்கே அணிக்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.