செந்தில்பாலாஜி குறித்த பேச்சு: வாபஸ் பெற்றார் அமைச்சர்
சென்னை: தி.மு.க.,வினர் எதிர்ப்பை தொடர்ந்து, செந்தில் பாலாஜி குறித்த சர்ச்சை வார்த்தையை, அமைச்சர் நிர்மல்குமார் திரும்ப பெற்றார்.
சட்டசபையில், மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில், தி.மு.க., - செந்தில்பாலாஜி பேசினார். துறையில் நிலவும் பிரச்னைகளை பட்டியலிட்டார்.
அப்போது, மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குறுக்கிட்டு பேசும் போது, செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு தி.மு.க.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி எழுந்து, ''அமைச்சர் கூறிய வார்த்தையை நீக்கி விட்டீர்களா,'' என, சபாநாயகரிடம் கேட்டார். அப்போது, மின்துறை அமைச்சர் குறித்து, அவர் சொன்ன வார்த்தைக்கு, ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு அமைச்சர் நிர்மல்குமார், ''மூன்று மணி நேரம் கழிப்பறையில் இருந்தது குறித்து, நானும் பேசுவேன்,'' என்றார். அத்துடன், செந்தில் பாலாஜி குறித்த வார்த்தையை திரும்பப் பெறுவதாகவும் கூறினார். அந்த வார்த்தையை சபைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக, சபாநாயகர் அறிவித்தார்.
மீண்டும் எழுந்த உதயநிதி, ''கழிப்பறையில் யார், எவ்வளவு நேரம் இருக்கின்றனர் என கணக்கெடுப்பதற்கு, தனி அமைச்சரை நியமித்துள்ளீர்களா,'' என, சபாநாயகரிடம் கேட்டார். ''இந்த பிரச்னையை இத்துடன் முடித்துக் கொள்ளுங்கள்,'' எனக்கூறி, சபாநாயகர் முற்றுப்புள்ளி வைத்தார்.
'கடன் வாங்காமல் இருக்க முடியாது' ''கடன் வாங்கி தான் ஆக வேண்டும். ஆனால், அந்த கடன் தொகையை, எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்,'' என, அமைச்சர் நிர்மல்குமார் கூறினார். சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - செந்தில்பாலாஜி: இரண்டு மாதங்களாக லட்சக்கணக்கானவர்கள், தங்களுக்கு மின் கட்டணம் உயர்ந்துள்ளதாக சுட்டிக் காட்டினர். அங்கொன்றும், இங்கொன்றுமாக குறைபாடுகள் இருப்பதாக, மின்துறை அமைச்சர் பேட்டி கொடுத்தார். ஆனால், மின்வாரிய தலைவர், 3.70 லட்சம் மின் இணைப்புகளில் மறுஆய்வு அறிவித்தார். அமைச்சர் நிர்மல்குமார்: சமூக ஊடகங்களில் வந்த தகவலை அடுத்து, 3.70 லட்சம் மின் இணைப்புகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில், 2,719 மின் இணைப்பில் மட்டுமே, தவறான கணக்கீடு கண்டறியப்பட்டது. முந்தைய கணக்கீடை வைத்து, அதை கணக்கிட்டதே காரணம். செந்தில் பாலாஜி: த.வெ.க., ஆட்சியில், மின்வாரியத்திற்கு கடன் வாங்கப்படுமா; கடன் சுமை ஏறாமல் பார்த்துக் கொள்வீர்களா; புதிய திட்டங்களுக்கு அரசு நிதி கொடுக்குமா? அமைச்சர் நிர்மல்குமார்: ஓரளவிற்கு தான் அரசு நிதி வழங்கும். மற்ற பணிகளை கடன் வாங்கித்தான் செய்ய முடியும். கடனை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பார்க்க வேண்டும். ஒவ்வொரு ரூபாயையும் வாரியத்திற்கு செலவழிப்போம். இவ்வாறு விவாதம் நடந்தது.