சிஎஸ்கே
சிஎஸ்கே-வின் அடிமடியில் கைவைத்த ஹர்திக் பாண்டியா.. கேப்டன் ருதுராஜை நீக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ள ஹர்திக் பாண்டியா 2027 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணையப் போவதாக சில வாரங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், சிஎஸ்கே அணியின் திட்டத்தில் அவர் கை வைத்துள்ளார் எனவும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கும் அளவுக்கு அவரது கோரிக்கை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலக உள்ள ஹர்திக் பாண்டியா அடுத்ததாக எந்த அணிக்குச் செல்வார் என்ற எதிர்பார்ப்பு ஐபிஎல் வட்டாரத்தில் எகிறியுள்ளது. இவரைத் தங்களது அணியில் இணைக்க சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 3 முக்கிய அணிகள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதில் முன்னிலையில் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், ஹர்திக் பாண்டியா தான் செல்லும் அணியில் கேப்டன் பதவியைக் கேட்பதாக பத்திரிகையாளர் ரோஹித் ஜுக்லான் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார்.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வருகிறார். அவரை நீண்ட கால அடிப்படையில் சிஎஸ்கே அணி தயார் செய்து கேப்டனாக நியமித்துள்ளது. எனவே, ருதுராஜை நீக்கிவிட்டு ஹர்திக்கிற்கு கேப்டன் பதவியைத் தர சிஎஸ்கே நிர்வாகம் விரும்பாது என்றே கூறப்படுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்கக்கூடிய ஒரே நபர் தோனி மட்டும்தான். தோனி தலையிட்டு ருதுராஜ் அல்லது ஹர்திக் ஆகிய இருவரில் ஒருவரைச் சமாதானப்படுத்தினால் மட்டுமே இந்த ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று கூறப்படுகிறது.
ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குச் செல்ல ஹர்திக் முன்னுரிமை அளிக்கலாம். ஏனெனில் கொல்கத்தா அணிக்கு ஒரு சிறந்த கேப்டனும், வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரும் தேவைப்படுகிறார்கள். அதற்கு ஹர்திக் கச்சிதமாகப் பொருந்துவார்.
மறுபுறம், டெல்லி கேபிடல்ஸ் அணியும் ஹர்திக்கை உற்றுநோக்கி வருகிறது. டெல்லி அணியில் ரிஷப் பண்ட் கேப்டன் பதவியை ஏற்க மறுத்துள்ளதால், கேஎல் ராகுல் மற்றும் 2026 சீசனில் அணியை வழிநடத்தி 6வது இடத்தைப் பிடித்த அக்சர் படேல் ஆகியோருடன் ஹர்திக் பாண்டியாவும் கேப்டன் ரேஸில் இணைய வாய்ப்புள்ளது. 2027 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக எழுந்துள்ள ஹர்திக்கின் கேப்டன்சி ஆசை ஐபிஎல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.