சிங்கப்பூரில் சட்டவிரோத தங்குமிடம்: கண்காணிப்பு தீவிரம்
சிங்கப்பூரில் குறுகிய காலத் தங்குமிடங்கள் மற்றும் சட்டவிரோத விடுதிகள் தொடர்பான சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிகாரிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் சிராங்கூன் ரோட்டில் அமைந்துள்ள ஒரு பாரம்பரியக் கடைவீட்டின் மேல் தளங்கள், அனுமதியின்றி ஊழியர்கள் தங்குமிடமாக மாற்றப்பட்டிருந்தது அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கு வெறும் பத்து அறைகளில் 36 படுக்கைகள் அமைத்து, 37 பேர் மிகவும் நெருக்கடியான சூழலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அக்கம்பக்கத்தினரின் கவனத்தை ஈர்க்காமல் இருக்க, சலவை இயந்திரங்கள், படுக்கைச்சட்டங்கள் ஆகியவை பின் வழி மூலமாக ரகசியமாகக் கொண்டு வரப்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தங்குமிடத்தை அனுமதியின்றி நடத்திய குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட நபருக்கு S$90,000 அபராதம் விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் சந்தேகத்திற்குரிய இதுபோன்ற சட்டவிரோதத் தங்குமிடச் சம்பவங்கள் 2024ஆம் ஆண்டில் 534ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டில் 544ஆக உயர்ந்துள்ளது.
நடப்பாண்டின் முதல் ஐந்து மாதங்களிலேயே ஆணையம் ஏறத்தாழ 278 சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளது.
அதேபோல, குறுகிய காலத் தங்குமிடச் சம்பவங்களும் 2024ஆம் ஆண்டில் 200லிருந்து கடந்த ஆண்டில் 219ஆக அதிகரித்துள்ளன. இந்த ஆண்டின் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் 58 சம்பவங்கள் விசாரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சட்டவிரோத தங்குமிடங்களை விளம்பரப்படுத்தும் முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
தனியார் குடியிருப்பு வீடுகளைக் குறைந்தபட்சம் மூன்று மாத காலத்திற்காவது வாடகைக்கு விட வேண்டும் என்பது சிங்கப்பூரின் சட்ட விதிமுறையாகும். ஆனால், ‘கேரோசெல்’ போன்ற இணையத்தளங்களில் ஒரு மாத குறுகிய காலத் தங்குமிடங்களுக்கான விளம்பரங்கள் இடம்பெறுவது கண்டறியப்பட்டுள்ளது.
ஏர்பிஎன்பி போன்ற பிரதான தளங்களைத் தவிர்த்து, தற்போது சிங்கப்பூரில் பரவலாகப் பயன்படுத்தப்படாத பிற சமூக ஊடகங்கள் மூலமாக இவை விளம்பரம் செய்யப்படுவதால், இவற்றைத் தனித்துக் கண்டறிவது சவாலாக மாறியுள்ளது எனச் சொத்து பராமரிப்பு நிறுவனங்கள் கூறுகின்றன.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளில் அறிமுகமில்லாத நபர்கள் அடிக்கடி நடமாடுவது, குழப்பத்துடன் வழிகேட்கும் போக்கு போன்றவை இத்தகைய சட்டவிரோதத் தங்குமிடங்களுக்கான முக்கிய அறிகுறிகளாகப் பார்க்கப்படுகின்றன.
அடிக்கடி ஆட்கள் மாறுவது குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைப் பாதிப்பதோடு, வீடமைப்புச் சந்தையில் தேவையற்ற விலையேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
எனவே, அரசாங்கத்தின் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளுடன் இணைந்து, பொதுமக்கள் மற்றும் சொத்துப் பராமரிப்பாளர்கள் வழங்கும் களத் தகவல்கள் இத்தகைய சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க உதவும் என வலியுறுத்தப்படுகிறது.