சிங்கப்பூரில் மோசமடையும் சாலை விபத்துகள், காயமடைந்தோர் எண்ணிக்கை
சிங்கப்பூரில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முற்பாதியில் கணிசமாக அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டின் முற்பாதியுடன் ஒப்புநோக்க இவ்வாண்டின் அதே காலகட்டத்தில் சாலை விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கையும் கூடியது.
வேகக் கட்டுப்பாட்டை மீறியக் குற்றங்கள், வேகமாக வாகனத்தை ஓட்டியதால் ஏற்பட்ட விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை, சாலை விபத்துகளில் காயமடைந்த அல்லது உயிரிழந்த மூத்த பாதசாரிகளின் எண்ணிக்கை ஆகியவையும் அதிகரித்துள்ளன.
எனினும், விபத்து நேர்ந்தபோது சாலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவு.
வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 28) புள்ளிவிவரங்களை வெளியிட்ட போக்குவரத்துக் காவல்துறை, கடந்த மூவாண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துவருவதைச் சுட்டியது.
கடந்த ஆண்டின் முற்பாதியில் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை 3,748. அந்த எண்ணிக்கை இவ்வாண்டின் முற்பாதியில் 3,869 அதிகரித்தது.
கடந்த ஆண்டின் முற்பாதியில் சாலை விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கை 4,894. ஒப்புநோக்க இவ்வாண்டின் முற்பாதியில் அது 5,090 உயர்ந்தது.
விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. கடந்த ஆண்டின் முற்பாதியில் 2,096ஆக இருந்த எண்ணிக்கை இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் 2,186ஆனது.
இவையும் உங்களுக்குப் பிடிக்கலாம்
காயமடைந்தோர் எண்ணிக்கை 2,335லிருந்து 2,470க்கு அதிகரித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் மாதம்வரை ஏற்பட்ட 55.6 விழுக்காட்டுப் போக்குவரத்து விபத்துகள் மோட்டார்சைக்கிளோட்டிகளையும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து பயணம் செய்தோரையும் உள்ளடக்கியது.
சாலை பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர்ச் சாலை பாதுகாப்பு மன்றமும் இணைந்து செப்டம்பர் 12ஆம் தேதி, சிங்கப்பூர் ஓட்டுநர் பாதுகாப்பு இயக்கத்தை அறிமுகம் செய்யவிருக்கின்றன.
மூத்தோர் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் 144ஆகப் பதிவானது. கடந்த ஆண்டு அது 121ஆக இருந்தது.
விபத்துகளில் காயமடைந்தோர் எண்ணிக்கையும் 106லிருந்து 132க்கு அதிகரித்தது.