சிங்கப்பூரரின் ‘டத்தோ பதுகா’ விருது திரும்பப் பெறப்பட்டது
பெட்டாலிங் ஜெயா: சிங்கப்பூரைச் சேர்ந்த போ போ லியான் என்பவருக்கு வழங்கப்பட்ட “டத்தோ பதுகா” பட்டத்தைக் கிளந்தானின் மன்னர் ஐந்தாம் முஹம்மது, ஆகஸ்ட் 30 முதல் அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெற்றுள்ளார்.
போ என்பவருக்கு வழங்கப்பட்ட அந்தக் கௌரவப் பட்டத்தை மாநில மன்னர் ரத்து செய்துள்ளதாக கிளந்தானின் மாநிலச் செயலாளர் முகம்மது ஃபஹாருடீன் ஃபைசல் தெரிவித்துள்ளார்.
“இந்த ரத்து நடவடிக்கை மன்னரது உரிமை, சொந்த விருப்பம் ஆகியவற்றின் பேரில் மேற்கொள்ளப்பட்டது,” என்று திரு ஃபஹாருடீன் வியாழக்கிழமை (செப்டம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
திரும்பப் பெறப்பட்ட எந்தவொரு விருது, சின்னம், பதக்கம் அல்லது கௌரவ நட்சத்திரத்தை யாராவது தொடர்ந்து பயன்படுத்தினால், அவர்களுக்குக் குறைந்தது 10,000 வெள்ளி அபராதமோ ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.”
“மேலும், இச்சட்டத்தின் கீழ் குற்றங்களுடன் தொடர்புடையவை என சந்தேகிக்கப்படும் வளாகங்களுக்குள் நுழைந்து சோதனையிடுவதற்கும், ஆதாரங்கள் அல்லது பொருள்களைப் பறிமுதல் செய்வதற்கும் காவல் துறைக்கு இச்சட்டம் அதிகாரம் அளிக்கிறது,” என்றும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில், ஊழல் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்காக சிங்கப்பூர் ஆண் ஒருவரையும் மலேசிய பெண் ஒருவரையும் தேடி வருவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.