சுதந்திர தினத்தையொட்டி முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுடெல்லி: இந்தியாவின் சுதந்திர தினம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் புதுடெல்லியில் உயர் நீதிமன்றம், இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் (முனையம் 3) உட்பட ஆறு முக்கிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு வந்த மின்னஞ்சலில், பிற்பகல் 2.11 மணிக்கு குண்டு வெடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒரு போலி மிரட்டலாகத் தெரிந்தாலும், முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க இணைச் செயலாளர் குணால் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
ஜாம்நகர் ஹவுஸ், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட மற்ற இடங்களுக்கும் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் விரைந்தனர். சுதந்திர தினத்தை முன்னிட்டுப் பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் உரையாற்றவுள்ளதால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அண்மைய வாரங்களாகவே டெல்லியில் உள்ள பள்ளிகள், மேயர் அலுவலகம், அண்டை மாநிலமான ஹரியானா நீதிமன்றங்களுக்கும் இதுபோன்று தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவங்களைத் தொடர்ந்து பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.