CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும்
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் கர்நாடகா அரசு நீர் திறந்து விட்டுள்ளது. இதில் இயற்கை முதலமைச்சர் விஜய் பக்கம் இருப்பதாக தவெகவினர் புகழ்ந்துள்ளனர்.
காவிரி ஆற்றில் நீர் திறந்து விட கர்நாடகா அரசு மறுத்த நிலையில், இயற்கையின் கருணையால் அது சாத்தியமாகியுள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கைவிரித்த கர்நாடகா அரசு
2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பின்படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகா அரசு குறிப்பிட்ட அளவு காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட வேண்டும். ஆனால் கடந்த மே மாத இறுதியில் போதிய அளவு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை என கூறி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய நீரை கர்நாடகா அரசு திறக்கவில்லை. இதுதொடர்பாக காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதனால் 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. அங்கும் தமிழ்நாட்டிற்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.
விஜய் எடுத்த திடீர் முடிவு
இப்படியான நிலையில் மேகதாது அணை விவகாரம், காவிரி நீர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முதலமைச்சர் விஜய் கர்நாடகா மாநில முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமாரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை தமிழக எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்தது. இதனிடையே தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறக்கக்கூடாது என கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. ஆகஸ்ட் 13ம் தேதி முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதலில் விஜய் வருகையை வரவேற்ற டி.கே.ஷிவக்குமார், கடைசி நேரத்தில் அவரை வர வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதனால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.
இயற்கை வென்றது - காவிரி நீர் வந்தது
இப்படியான நிலையில் கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வந்தன. இதனையடுத்து பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து முதலில் 5 ஆயிரம் கன அடியும், பின்னர் அது 15 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்து நீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி நீரை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழ்நாடு அரசு சற்று நிம்மதியடைந்துள்ளது.
Also Read: கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல
அந்த வகையில் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட பதிவில், “இயற்கையின் அருள் எப்போதும் மக்களின் நலனுக்கே துணை நிற்கிறது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால், காவிரியில் நீர்வரத்து அதிகரித்து, டெல்டா விவசாயிகளின் பாசனத் தேவைகள் பூர்த்தியாகும் சூழல் உருவாகியுள்ளது.எத்தனை இடையூறுகளும், எத்தனை தடைகளும் வந்தாலும், மக்களின் நலனையே சிந்திக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அண்ணன் அவர்களின் நல்ல மனதிற்கு இயற்கையே துணை நிற்கிறது.
மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் ஒவ்வொரு நல்ல முயற்சிக்கும் இயற்கையின் ஆசீர்வாதம் என்றும் இருப்பதை இந்த நிகழ்வு மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது.இதன் மூலம் காவிரி டெல்டா விவசாயிகளின் குறுவை, சம்பா சாகுபடிகள் செழித்து வளர்ந்து, விவசாயிகளின் இல்லங்களில் வளமும் மகிழ்ச்சியும் பெருக இறைவனை மனமார வேண்டுகிறேன்.நல்ல மனமும், மக்கள் நல எண்ணமும் இருக்கும் இடத்தில் இயற்கையும் துணையாக நிற்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி