இந்தியாவுக்கு தண்ணீ காட்டிய வீரருக்கு ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது
இந்தியாவுக்கு தண்ணீ காட்டிய வீரருக்கு ஐசிசியின் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது
மும்பை: இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணியின் பேட்டர் சோனல் தினுஷா, ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த ஆடவர் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடரில் அபாரமாக விளையாடிய இந்த இடதுகை பேட்டர், 140 சராசரியுடன் மூன்று சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் உட்பட ஒட்டுமொத்தமாக 420 ரன்கள் குவித்து அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததுடன், தினுஷா எடுத்த 184 ரன்களும் வீணாகின. எனினும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அணியை மற்றொரு பெரும் தோல்வியிலிருந்து அவர் ஒற்றையாளாகக் காப்பாற்றினார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்த 25 வயதான தினுஷா, கடைசி நாள் முழுவதும் களத்தில் நின்று விளையாடி ஆட்டத்தை டிரா செய்ய உதவினார். 264 பந்துகளில் 133 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த இவரது அசாத்திய ஆட்டத்தால், இலங்கை அணி இறுதி நாளின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 429 ரன்கள் எடுத்தது. இட்நத பந்யத்தில் இங்கிலாந்து வீரர் ஆலி ராபின்சன் மற்றும் ஹசன் மஹமத் ஆகியோர் இருந்தனர்.
இந்த அங்கீகாரம் குறித்து பேசிய தினுஷா, "எனது தொழில்முறை வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்திலேயே கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் எனக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இதற்காக ஐசிசி-க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிற்கு எதிரான தொடர் எப்போதும் எனது இதயத்தில் தனி இடம் பிடித்திருக்கும். கொழும்பு மற்றும் காலே மைதானங்களில் எங்கள் சொந்த நாட்டு ரசிகர்களுக்கு முன்னிலையில் மூன்று சதங்கள் அடித்தது எனது நீண்ட நாள் கனவு நனவானது போன்றது" என்றார்.
"நாங்கள் எதிர்பார்த்த ஒட்டுமொத்த முடிவு கிடைக்கவில்லை என்றாலும், இரண்டாவது போட்டியில் எங்கள் அணி போராடிய விதம் எங்களின் மன வலிமை, நம்பிக்கை மற்றும் உறுதியை வெளிப்படுத்தியது. எனது அணியினருடன் இணைந்து போராடியதில் பெருமை கொள்கிறேன். இலங்கைக்காக விளையாடுவதை நான் எப்போதும் ஒரு பெருமையாகக் கருதுகிறேன்.
இந்த அங்கீகாரம் எனது ஆட்டத்தை மேலும் கற்றுக்கொள்ளவும், மேம்படுத்தவும், அணிக்காக பங்களிக்கவும் எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது" என்று கூறினார். தினுஷா கடந்த ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி, இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.