EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
ETV Bharat / education-and-career
EPFO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையர் காலிப்பணியிடங்களுக்கு செப்டம்பர் 11-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
Published : August 25, 2026 at 8:01 AM IST
புது டெல்லி: மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) காலியாகவுள்ள 80 உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பணியிடங்கள் நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.
மத்திய அரசில் வேலை எதிர்பார்க்கிறவர்களுக்கான சூப்பர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் காலிப்பணியிடங்களை நிரப்ப யுபிஎஸ்சி (UPSC) அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்களின் விவரம்
மொத்தமுள்ள 80 காலிப்பணியிடங்கள் பொதுப்பிரிவு - 29, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள் - 8, ஒபிசி - 18, எஸ்சி - 15, எஸ்டி - 10 என்ற அடிப்படையில் நிரப்பப்படுகிறது. இதில் 3 காலிப்பணியிடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எத்தனை வயது வரை இருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்?
இப்பணியிடங்களுக்கு 2026-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதியின்படி, பொதுப்பிரிவினர் 35 வயது வரையும், ஒபிசி பிரிவினர் 38 வயது வரையும், எஸ்சி/ எஸ்டி பிரிவினர் 40 வயது வரையும் இருக்கலாம்.
இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் கூடுதலாக வயது தளர்வு வழங்கப்படும். அதன்படி அதிகபட்சமாக 56 வயது வரை உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
என்ன படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்?
இப்பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், நிறுவன சட்டம், தொழிலாளர் சட்டங்கள், பொது நிர்வாகம் ஆகியவற்றில் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் தகுதி மதிப்பெண்களாக பொதுப்பிரிவினர்களுக்கு 50, ஒபிசி பிரிவினருக்கு 45, எஸ்சி/ எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்தேர்வு கொள்குறி வகையில் 2 மணி நேரம் நடைபெறும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள்.
ஆங்கிலம், இந்திய கலாச்சாரம், பொது அறிவியல், தொழில்முறை உறவுகள், இந்திய அரசியலமைப்பு சட்டம், கணக்கியல், தணிக்கை மற்றும் காப்பீடு ஆகியவற்றின் கோட்பாடுகள், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 100 மதிப்பெண்களுக்கு நேர்காணலும் நடத்தப்படும். எழுத்துத் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண் பிடித்தம் செய்யும் முறை உள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் தேர்வு மையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் எவ்வளவு?
இப்பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மத்திய அரசின் ஊதியத்தின் படி, நிலை 10 கீழ் ரூ. 56,100 முதல் அதிகபடியாக ரூ. 1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள பட்டதாரிகள் https://upsconline.nic.in/ அல்லது https://www.upsc.gov.in/ என்ற இணையதளங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு கட்டணமாக ரூ. 25 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
முக்கிய நாட்கள்
யுபிஎஸ்சி மூலம் இப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் கூடுதல் விவரங்கள் மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.