"இலங்கையில் பயங்கரமாக திரும்பும்.. நம்ம வீரர்கள்..".. இந்திய அணியின் பலவீனத்தை சொன்ன தீப் தாஸ்குப்தா
"இலங்கையில் பயங்கரமாக திரும்பும்.. நம்ம வீரர்கள்..".. இந்திய அணியின் பலவீனத்தை சொன்ன தீப் தாஸ்குப்தா
சென்னை: இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்திய அணியின் முக்கியமான பலவீனம் குறித்து முன்னாள் விக்கெட் கீப்பரும் கிரிக்கெட் விமர்சகருமான தீப் தாஸ்குப்தா தனது கவலைகளைப் பட்டியலிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 15 முதல் 29 வரை இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முன்னேற இந்தத் தொடர் மிகவும் முக்கியமானது. சமீபகாலமாக சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்திய பேட்டர்கள் தடுமாறி வரும் நிலையில், தீப் தாஸ்குப்தா அதுபற்றி முக்கிய கருத்துக்ககளை கூறி இருக்கிறார்.
இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய தீப் தாஸ்குப்தா கூறியதாவது: "ஆடுகளங்கள் பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தால், இந்திய அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நீண்ட காலமாக முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி வரும் நல்ல ஆஃப்-ஸ்பின்னரான சரன்ஷ் அணியில் இணைந்துள்ளார். அவரால் நன்றாக பேட்டிங் செய்யவும் முடியும். வாஷிங்டன் சுந்தர் இல்லாத நேரத்தில் பந்துவீச்சில் கூடுதல் தேர்வாக அவர் இருப்பார். மேலும் நம்மிடம் இடது கை ஸ்பின்னர்களும், குல்தீப் யாதவும் உள்ளனர். எனவே, பந்துவீச்சைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் கவலை எல்லாம் பேட்டிங் பற்றித்தான்.
தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களைப் பார்த்தால் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இந்திய பேட்டர்கள் தடுமாறி உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் ஒரு புதிய பேட்டிங் வரிசையைப் பார்த்தோம். இதனால் எனக்குப் பயம் என்று சொல்ல முடியாது, ஆனால் நிச்சயம் ஒரு கவலை ஏற்பட்டுள்ளது. சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களை இந்திய பேட்டர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்? ஏனெனில், இலங்கை அணியின் பலமே சுழற்பந்து வீச்சுதான். அங்கு ஆடுகளங்கள் பயங்கரமாகத் திரும்பும். அந்தச் சூழலில் இந்திய பேட்டர்கள் எப்படி விளையாடுவார்கள் என்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கும்."
மேலும், "முதலாவதாக, எளிதான டெஸ்ட் தொடர் என்று எதுவுமே இல்லை. குறிப்பாக இந்திய டெஸ்ட் அணி தற்போது ஒரு மாற்றத்தை கடந்து வருகிறது. இதனால் எந்த ஒரு போட்டியையும் நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக, இலங்கையில் விளையாடுவது எப்போதுமே கடினமானது. இப்போதைய சூழலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இன்னும் 9 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள், இலங்கைக்கு எதிராக 2 போட்டிகள், நியூசிலாந்திற்கு எதிராக 2 போட்டிகள் என இன்னும் 9 போட்டிகள் உள்ளன. இதில் 7 போட்டிகளில் வென்றால் மட்டுமே நம்மால் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற முடியும். இதுவே ஒரு கடினமான பணிதான். இதில் இலங்கைக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணிலும், நியூசிலாந்திற்கு எதிராக அவர்களது சொந்த மண்ணிலும் விளையாட வேண்டும்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியைத் தவிர்த்துப் பார்த்தால், நமது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 3 தொடர்களில் 2 தொடர்களை (நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக) நாம் தோற்றுள்ளோம். எனவே, எந்த ஒரு சூழலிலும் எந்த ஒரு எதிரணியையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது." என்றார் தீப்தாஸ் குப்தா.