IND vs AFG: ரிஷப் பண்ட்க்கு பறிபோன கேப்டன் பதவி.. கம்பீர் சொன்ன அறிவுரை.. பேட்டிங் குறித்து வார்னிங்
IND vs AFG: ரிஷப் பண்ட்க்கு பறிபோன கேப்டன் பதவி.. கம்பீர் சொன்ன அறிவுரை.. பேட்டிங் குறித்து வார்னிங்
சண்டிகர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தனது ஆடும் முறையை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை வீரரான பண்ட், சவாலான சூழல்களில் கூடுதல் பொறுப்புடனும், ஆட்டத்தின் போக்கைப் புரிந்தும் செயல்பட வேண்டும் என்பதே அணியின் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கடந்த காலங்களில், ரிஷப் பண்ட் அவுட் ஆகும் விதம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன, குறிப்பாக அவரது ஷாட் தேர்வுகள் கவனக்குறைவாக இருந்ததாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இருப்பினும், கம்பீர் ஒரு விஷயத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டார். பண்ட் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அதே நேரத்தில், சர்வதேச கிரிக்கெட்டின் மாறுபட்ட சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வதும், எப்போது தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும், எப்போது நிதானிக்க வேண்டும் என்பதை உணர்வதும் மிக அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், "ரிஷப் பண்டைப் பொறுத்தவரை, அவர் எப்படி விளையாடுகிறாரோ, அப்படியே விளையாட வேண்டும் என்றுதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அவர் தனது ஆட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் சொல்லப்போவதில்லை. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில், ஆட்டத்தின் சூழலைப் புரிந்துகொண்டு விளையாடுவது மிகவும் முக்கியம். அந்தச் சூழல் என்ன கோருகிறது, அங்கு எப்படிப்பட்ட ஷாட்களை ஆட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்" என்று விளக்கினார்.
"எந்தவொரு வீரரும் தனது இயல்பான ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தவில்லை. டெஸ்ட், ஒருநாள் அல்லது டி20 எதுவாக இருந்தாலும், ரன்கள் எடுப்பதும் விக்கெட்டுகளை வீழ்த்துவதுமே இறுதி இலக்கு. அந்த இலக்கை எப்படி அடைகிறீர்கள் என்பது உங்கள் விருப்பம், ஆனால் சூழலைச் சரியாகப் படிப்பது மிக முக்கியம்," என்று கம்பீர் தனது கருத்தைச் சேர்த்துக் கொண்டார்.
பண்ட் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, அவரது அணுகுமுறையில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்விக்கு கம்பீர் பதிலளித்தார். தனிப்பட்ட வீரர்களின் செயல்பாடே சர்வதேச கிரிக்கெட்டில் மிக முக்கியமானது என்று அவர் சுட்டிக்காட்டினார். கேப்டன்சி, துணை கேப்டன்சி போன்ற பதவிகள் விளையாட்டின் ஒரு சிறு பகுதி மட்டுமே என்று அவர் கூறினார்.
"இந்தியாவிற்காக விளையாடும்போது, முதல் நாளிலிருந்தே துணை கேப்டன் அல்லது கேப்டன் ஆக வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை; அணியின் வெற்றிக்குச் சிறப்பாகப் பங்களிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். மற்ற அனைத்தும் துணைப் பலன்களே. இறுதியில் நானும், பயிற்சியாளர்கள் குழுவும், வீரர்களும் என அனைவரும் அவர்கள் வெளிப்படுத்தும் செயல்பாடுகளைக் கொண்டுதான் மதிப்பிடப்படுவார்கள். இதுதான் சர்வதேச கிரிக்கெட்டின் அடிப்படை," என்று கம்பீர் தெரிவித்தார்.