தவெக
பிரவீன் சக்கரவர்த்தி
ராகுல் காந்தியின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் பிரவீன் இருக்கிறார். இதனால் அவரின் கருத்து எப்போதும் உற்று கவனிக்கப்படுவது வழக்கம். மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக அரசியலிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சக்கரவர்த்தி. இதன் காரணமாகவே அவர், கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட முயற்சி செய்தார். காங்கிரஸ் மேலிடம் முழு சம்மதம் தெரிவித்தாலும், திமுக தலைமை ஒப்புக்கொள்ளாததால் அவர் போட்டியிட முடியாமல் போனதாகவும் சொல்லப்படுவதுண்டு.
விஜய் தவெகவை தொடங்கிய பின்னர் திமுக கூட்டணிக்கு எதிராக தமிழக காங்கிரஸில் அவ்வப்போது சலசலப்பு குரல்கள் எழ ஆரம்பித்தன. திமுக, பாஜக, அதிமுகவை ரவுண்டு கட்டி விளாசிய விஜய் எங்கேயும் காங்கிரஸை விமர்சித்ததில்லை. விஜய் - ராகுல் காந்தி இடையே நட்பு பாலமாக பிரவீன் இருந்தார் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே ஸ்டாலினுடனான நெருக்கத்தை ராகுல் குறைத்துக் கொண்டதாகவும் பேச்சு உண்டு.
காங்கிரஸ் ஏற்படுத்திய திடீர் கலகம் காரணமாக கூடுதல் தொகுதிகள் மற்றும் ராஜ்யசபா சீட் கொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது திமுக. ஆனாலும் கூட, கடைசி வரை திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பங்கேற்கவே இல்லை. இப்படி ஏகப்பட்ட களேபரங்களுடன் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியடைந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.
108 இடங்களுடன் ஆட்சியமைக்க முடியாமல் தவெக தவித்தபோது, எந்தக் கேள்வியும் இல்லாமல் முதலில் கைகொடுத்தது காங்கிரஸ். அத்துடன், அடுத்தடுத்த மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களிலும் தவெகவோடு தான் கூட்டணி என ஒரே போடாக போட்டது காங்கிரஸ்.