IND vs SL டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்.. காஷ்மீர் வீரர் சேர்க்கப்பட வாய்ப்பு
IND vs SL டெஸ்ட் தொடரிலிருந்து பும்ரா விலகல்.. காஷ்மீர் வீரர் சேர்க்கப்பட வாய்ப்பு
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து உலகின் முதல் நிலை பவுலரான பும்ரா விலகியுள்ளார். பும்ராவிற்கு இடது முழங்காலில் தொடர்ந்து அசௌகரியம் நீடித்து வருவதால், அவரை அவசரமாக மீண்டும் விளையாடவிக்க பிசிசிஐ விரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக, அவர் முழுமையாக குணமடைவதில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
பும்ரா கடைசியாக நவம்பர் 2025-இல் குவஹாத்தியில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடினார். தற்போது இலங்கைத் தொடரில் அவர் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது.
விலகிய பும்ராவிற்குப் பதிலாக விளையாடவிருக்கும் மாற்று வீரரை பிசிசிஐ தேர்வு குழுவினர் வரும் நாட்களில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் 29 வயது வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் நபி தார், இந்திய அணியில் பும்ராவின் இடத்தைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுவரை இந்திய அணிக்காக விளையாடாத ஆகிப், உள்ளூர் கிரிக்கெட்டில் தனது சிறப்பான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2025-26 ரஞ்சி கோப்பை சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த அவர், ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பை பட்டத்தை வெல்ல முக்கிய பங்களிப்பை வழங்கினார்.
பாரமுல்லாவைச் சேர்ந்த 29 வயதான இந்த வேகப்பந்து வீச்சாளர், இதுவரை 43 முதல்தர போட்டிகளில் விளையாடி 162 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த மாதம் இந்தியா 'ஏ' அணியுடன் இலங்கை சென்றிருந்த அவர், இலங்கை ஏ அணிக்கு எதிரான இரண்டு முதல்தர போட்டிகளிலும் விளையாடினார். காலேவில் நடைபெற்ற இந்த இரண்டு போட்டிகளின் நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும்.
ஜூன் 2026 இல் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் போது ஆகிப் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாக வாய்ப்பிருந்தது. ஆனால், பிசிசிஐ தேர்வு குழுவினரால் அவர் எதிர்பாராத விதமாகப் புறக்கணிக்கப்பட்டார். தொடர்ச்சியான ரஞ்சி கோப்பை சீசன்களில் 50-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரு பந்துவீச்சாளரைத் தேர்வு குழு புறக்கணித்த முடிவு, அப்போது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.