📅 Thursday, 17 September 2026 IST | புரட்டாசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 02, 2026 04:32 PM

"இனி இந்திய அணி எனக்கு முக்கியமில்லை".. 2027 உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து புவனேஸ்வர் குமார் பேச்சு

"இனி இந்திய அணி எனக்கு முக்கியமில்லை".. 2027 உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து புவனேஸ்வர் குமார் பேச்சு

"இனி இந்திய அணி எனக்கு முக்கியமில்லை".. 2027 உலகக்கோப்பை வாய்ப்பு குறித்து புவனேஸ்வர் குமார் பேச்சு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார், 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட வேண்டும் என அஸ்வின் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஆனால், புவனேஸ்வர் குமார் அது குறித்து நேர்மாறான கருத்தை கூறி இருக்கிறார்.

புவனேஸ்வர் குமார், கடந்த 2022ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடவில்லை. இந்தியாவிற்காக இதுவரை 21 டெஸ்ட், 121 ஒருநாள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், சமீபத்தில் 2026 ஐபிஎல் தொடரை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கிய பந்துவீச்சாளராகத் திகழ்ந்தார். அந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான ஆர்சிபி பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய புவனேஸ்வர் குமார் கூறுகையில், "நான் தற்போது ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஒரே காரணம், எனக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள காதல் தான். நான் ஏற்கனவே இந்தியாவிற்காக விளையாடிவிட்டேன். எனவே, நான் புதிதாக எதையும் சாதிக்க வேண்டியதில்லை. மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி, ஆனால் அதற்காக நான் ஏங்கவில்லை.

எனது குடும்பத்தினருக்கு நான் பெரிய நன்றியைத் தெரிவிக்க வேண்டும். வீட்டில் நாங்கள் ஒருபோதும் கிரிக்கெட் குறித்தோ, நான் ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்தோ பேசுவதில்லை. இது எனது மன அமைதிக்கு முக்கியக் காரணமாகும். கிரிக்கெட்டில் தலைமுறை மாற்றம் என்பது சாதாரண ஒன்றுதான். அதற்கு நான் முதலாமவனும் அல்ல, கடைசியானவனும் அல்ல."

இந்திய வேகப்பந்து வீச்சின் வளர்ச்சி குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவில் வேகப்பந்து வீச்சு இந்த அளவிற்கு முன்னேறியதற்கு ஐபிஎல் தொடர் முக்கியக் காரணம். அதேபோல், முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் தொலைநோக்குப் பார்வைக்கு இதில் பெரிய பங்கு உண்டு. வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களுக்கு முன்னதாக, அதற்குத் தயாராகும் வகையில் நமது சொந்த மண்ணிலும் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களை அவர்கள் உருவாக்கினார்கள். அவர்களின் இந்த சிறிய முடிவுகள் இந்திய வேகப்பந்து வீச்சுக் கூட்டணியை பலப்படுத்தியது" என்று கூறினார்.