இந்தியா, ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு வர்த்தக வளர்ச்சி உயரும் ஆஸி., துாதர் நம்பிக்கை
புதுடில்லி: இந்தியா, ஆஸ்திரேலியா இடையே இருதரப்பு வர்த்தக விரிவாக்கத்துக்கு சிறப்பான வாய்ப்பு இருப்பதாக, இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துாதர் பிலிப் கிரீன் கூறினார்.
அவர் இதுகுறித்து கூறியதாவது:
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பொருட்கள் மற்றும் சேவை துறைகளில் விரிவாக்கத்துக்கு வாய்ப்புகள் உள்ளன.
மேலும், இந்திய விவசாயிகளை பாதிக்காத வகையில் வேளாண் துறையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கருதுகிறோம். இத்துறையில் இந்தியா, சற்றே வரிக்குறைப்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஒரு நாட்டின் கல்வித்தகுதியை இன்னொரு நாடு அங்கீகரிப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இதை செயல்படுத்திவிட்டால் இரு நாடுகளிலிருந்து எவ்வித தடையும் இன்றி, பணியாளர்கள் பரஸ்பரம் பணியாற்ற செல்ல முடியும். இந்தியா, தொழிலாளர் இடப்பெயர்வு விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையில் இந்தியர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கிளை திறந்துள்ளன. இதனால், குறைந்த செலவில், இங்கிருந்தே ஆஸ்திரேலிய கல்வியை இந்திய மாணவர்கள் பெற முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது 1,35,000 இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கின்றனர்
ஆஸ்திரேலியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கின்றனர்