இந்தியா-சிங்கப்பூர் உறவுகள்: லாரன்ஸ் வோங்
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் நான்காவது ‘இந்தியா - சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசைச் சந்திப்பின் முக்கிய அங்கமாக, இந்திய அமைச்சர்கள் பிரதமர் லாரன்ஸ் வோங்கை நேரில் சந்தித்துப் பேசினர்.
வியாழக்கிழமை (ஆகஸ்ட் 20) நடைபெற்ற இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா ஆகியோர் இந்த உயர்மட்டச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது இருநாடுகளின் விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவத்தை மேலும் ஆழப்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியா - சிங்கப்பூர் இடையேயான நவீன உற்பத்தி, மின்னிலக்கப் பொருளியல், பசுமை முயற்சிகள், தடையில்லாத் தொடர்புத் திறன் ஆகிய துறைகளில் கவனம் செலுத்த இந்தச் சந்திப்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், வட்டார உலகளாவிய விவகாரங்கள் குறித்த கருத்துகளும் தலைவர்களின் கலந்துரையாடலில் முக்கிய இடம்பெற்றன.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீண்டகால நெருங்கிய நல்லுறவைச் சுட்டிக்காட்டிய பிரதமர் வோங், அடுத்த பத்தாண்டுகாலப் பொருளியல் வளர்ச்சியை நோக்கி இந்தியாவும் சிங்கப்பூரும் இணைந்து செயல்படத் தயாராக உள்ளதாக உறுதியளித்தார்.