இந்தியா தோற்பதற்கு காரணமே இது தான்.. இவர்களை எல்லாம் அணியை விட்டு நீக்குங்க.. கவாஸ்கர் கோரிக்கை
இந்தியா தோற்பதற்கு காரணமே இது தான்.. இவர்களை எல்லாம் அணியை விட்டு நீக்குங்க.. கவாஸ்கர் கோரிக்கை
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள சுமார் ஃபீல்டர்களை அணியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் கேப்டனால் 3 அல்லது 4 பலவீனமான ஃபீல்டர்களை மைதானத்தில் மறைத்து வைக்க முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு இந்திய அணி மேற்கொண்ட சுற்றுப்பயணங்களில் ஃபீல்டிங் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. இந்த சுற்றுப்பயணங்களில் இந்திய அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 8 போட்டிகளில் தோல்வியைத் தழுவியது. ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மட்டுமே இந்திய வீரர்கள் 10 கேட்ச்களைக் கைவிட்டு அதிர்ச்சியளித்தனர்.
இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மீது விமர்சனங்கள் எழுந்து வரும் வேளையில் கவாஸ்கரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன. சமீபத்திய ஃபீல்டிங் சொதப்பல்களால் அவர் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஃபீல்டிங் பிரிவில் நிபுணத்துவம் பெற்ற உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்காட், திலீப் காரணமாக அணியில் தனது அதிகாரத்தை முழுமையாக செலுத்த முடியாமல் தவிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
"ஒரு வீரர் சுமாரான ஃபீல்டராக இருந்தால், அவரை அணியிலிருந்து நீக்குவது கட்டாயமாகும். பந்து அவர்கள் பக்கம் சென்றுவிடக் கூடாது என்று பிரார்த்தனை செய்துகொண்டு, கேப்டன் மூன்று அல்லது நான்கு பேரை மைதானத்தில் ஒளித்து வைக்க வேண்டிய அவசியம் இருக்கக் கூடாது" என்று கவாஸ்கர் சாடியுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் சுற்றுப்பயணம் குறித்து ஆய்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ள நிலையில், அணி குறித்து "பீதி அடைய" வேண்டிய அவசியமில்லை என்று கவாஸ்கர் கூறினார். ஆனால், பேட்டிங் பொறுமை மற்றும் அணுகுமுறை குறித்து அணி சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"அணியின் பலவீனங்கள் என்ன என்பதை நேர்மையாக ஆராய்ந்து, அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்று சிந்திப்பதே தற்போதைய அவசரத் தேவையாகும். ஷாட்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது. இங்கு பேட்டர்கள் தங்களது கர்வத்தைக் கட்டுப்படுத்தி, தங்களின் இமேஜிற்காக விளையாடாமல் பந்தின் தகுதிக்கு ஏற்ப விளையாட வேண்டும்."
"டி20 போன்ற போட்டிகளில் கிட்டத்தட்ட ஒவ்வொரு பந்திலும் பெரிய ஷாட்களை ஆட வேண்டியிருப்பதால் இதைச் செய்வது எளிதல்ல. ஆனால் ஒருநாள் போட்டிகளில் நிலைமை வேறு. அங்கு அதிரடி ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, நிதானித்து விளையாட போதிய நேரம் இருக்கிறது" என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.