📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 31, 2026 10:03 AM

இந்தியா உடனான தோல்விக்கு பின் இலங்கைக்கு விழுந்த அடுத்த அடி.. சாட்டையை சுழற்ற போகும் ஐசிசி

இந்தியா உடனான தோல்விக்கு பின் இலங்கைக்கு விழுந்த அடுத்த அடி.. சாட்டையை சுழற்ற போகும் ஐசிசி

இந்தியா உடனான தோல்விக்கு பின் இலங்கைக்கு விழுந்த அடுத்த அடி.. சாட்டையை சுழற்ற போகும் ஐசிசி

கொழும்பு: 2027 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த முதலாவது சர்வதேச மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் உரிமையை இலங்கை கிரிக்கெட் வாரியம் இழக்கவுள்ளது. இந்தத் தொடர் இலங்கையிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்றப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறு அணிகள் பங்கேற்கும் இத்தொடர், அதே காலக்கட்டத்தில் இந்தியாவில் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தொடரை எந்த நாடு நடத்தும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி செயற்குழு கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.2026 ஆம் ஆண்டு நடைபெறும் ஆடவர் டி20 உலகக் கோப்பையை கூட்டாக நடத்திய பிறகு, இலங்கையில் ஓராண்டுக்குள் நடைபெறும் இரண்டாவது ஐசிசி தொடராக இது அமையவிருந்தது.

ஆனால், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தில் அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இந்த தொடரை நடத்தும் வாய்ப்பை இலங்கை தற்போது இழந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் இடைக்கால நிர்வாகத்தை இலங்கை அரசு அமைத்துள்ளது. வாரியத்தின் அரசியலமைப்புச் சட்டம் உட்பட முக்கிய மாற்றங்களைச் செய்யும் பொறுப்பு இக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அரசியல் ரீதியாக நியமிக்கப்படும் இதுபோன்ற நிர்வாகங்களை ஐசிசி அங்கீகரிப்பதில்லை. இதன் காரணமாக, இந்த மாற்றுக் குழு அமைக்கப்பட்டதில் இருந்து ஐசிசி கூட்டங்களில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை.

இந்தப் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுவது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக அமையக்கூடும். ஏனெனில், இத்தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் மட்டுமே இலங்கை அணி இதில் விளையாட தகுதி பெற்றிருந்தது. ஐசிசி தரவரிசையின்படி முதல் ஆறு இடங்களைப் பெறும் அணிகள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். தற்போதைய தரவரிசையின்படி இலங்கை அணி ஏழாவது இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. மேற்கிந்தியத் தீவுகள் அணி ஆறாவது இடத்தில் உள்ளதால், இலங்கை அணி தகுதி பெறாத பட்சத்தில் அவர்கள் இத்தொடரில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவர்.

கடந்த மூன்று ஆண்டுகளில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை இழப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே 2023 ஆம் ஆண்டிலும் இதே காரணத்திற்காக 2024 ஆடவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கையிடமிருந்து பறிக்கப்பட்டு, பின்னர் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டது.

தற்போது மாற்றுக் குழுவின் கட்டுப்பாட்டில் கிரிக்கெட் வாரியம் இருப்பதால், அதன் தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் முறை மற்றும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் அரசியலமைப்பை சீர்திருத்துவதே இக்குழுவின் முக்கிய பணியாகும். அந்நாட்டு சட்டங்களின்படி, நாடாளுமன்றத்தின் மூலமாக மட்டுமே நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து இதனைச் செய்ய முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கென ஒரு புதிய அரசியலமைப்பு வரைவை மாற்றுக் குழு தயாரித்துள்ளது. இது அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. இந்த நாடாளுமன்ற நடைமுறைகள் சுமுகமாக முடியும் பட்சத்தில், 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்று இக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.