இண்டியா கூட்டணியில் விரிசல்; கூட்டத்தைப் புறக்கணிக்கும் திமுக, இந்தியா செய்திகள்
புதுடெல்லி: ஜூன் 8ஆம் தேதி டெல்லியில் கூடும் ‘இண்டியா கூட்டணி’யின் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக அதிரடியாக அறிவித்திருக்கிறது திமுக.
காங்கிரசின் துரோகத்தால் மனவேதனை அடைந்த தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருக்கும் திமுக, காங்கிரஸ் பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் இனி பங்கேற்கமாட்டோம் என்றும் அறிவித்திருக்கிறது.
“நாட்டு நலன் கருதி இண்டியா கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்போம்,” என்று திமுக சொல்லி இருக்கிறது.
இண்டியா கூட்டணியில் ஆகப்பெரும் கட்சியாக காங்கிரஸ் இருந்தாலும் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளுக்கு காங்கிரஸ் மீது ஏதோ ஒரு மன வருத்தம் இருக்கவே செய்கிறது.
அத்தகைய வருத்தம் ஏதும் இல்லாமல் இருந்த ஒரே கட்சி திமுக மட்டும் தான். இப்போது அதையும் பகைத்துக் கொண்டு விட்டது காங்கிரஸ்.
திமுகவுக்குப் பதிலாக தவெக இண்டியா கூட்டணியில் சேரலாம் எனச் செய்திகள் வருகின்றன.
இண்டியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணிப்பதாக திமுக மட்டும் வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.
காங்கிரஸ் மீதிருக்கும் வருத்தங்களால் இன்னும் சில கட்சிகளும் கூட்டத்தைப் புறக்கணித்தால் இண்டியா கூட்டணிக்கு மாற்றாக இன்னொரு கூட்டணி பிறக்கலாம் என்று கூறப்படுகிறது.
திமுகவின் இந்த முடிவு ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அதேசமயம், இந்த விஷயத்தில் பாஜக மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இண்டியா கூட்டணியின் பிரதான அங்கமாக இருந்தது திமுக. திரு ஸ்டாலின் ‘ராகுல்தான் பிரதமர்’ என்ற முழக்கத்தை முதலில் முன்னெடுத்தவர்.
அதேபோல், காங்கிரசைவிட பிரதமர் நரேந்திர மோடியையும் பாஜகவையும் எதிர்த்தவரும் ஸ்டாலின்தான்.
திமுகவைப் பொறுத்தவரை, மத்தியில் பாஜகவை எதிர்கொள்ளும் தேசியச் சக்தி என்ற முறையில் காங்கிரசைப் பெரிதும் நம்பியது.
ஆனால், இந்தத் தேர்தல் அந்த நம்பிக்கையை எல்லாம் தூள் தூளாக்கிவிட்டது.
ஆரம்பத்திலிருந்தே தவெகவைக் காட்டி திமுகவை நெருக்கிய காங்கிரஸ், தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் இடம்பெற்றது.
அத்துடன், இனி வரும் தேர்தல்களிலும் தவெகவுடன்தான் கூட்டணி என்றும் தாமாக முன்வந்து அறிவித்தது. இது திமுகவுக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.