📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports May 31, 2026 09:30 AM

IPL 2026: பைனலுக்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நெருக்கடி.. தயாராக 24 மணி நேரம் கூட இல்லை

IPL 2026: பைனலுக்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நெருக்கடி.. தயாராக 24 மணி நேரம் கூட இல்லை

IPL 2026: பைனலுக்கு முன் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நெருக்கடி.. தயாராக 24 மணி நேரம் கூட இல்லை

சண்டிகர்: 2026 ஐபிஎல் தொடரின் பிரம்மாண்ட இறுதிப்போட்டி மே 31 அன்று நடைபெறவுள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. வடமேற்கு இந்தியாவில் வீசிய பலத்த புயல் மற்றும் மழை காரணமாக அந்த அணியின் பயணம் பல மணி நேரம் தாமதமானது.

வெள்ளிக்கிழமை இரவு (மே 29) நடைபெற்ற இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் இருந்த குஜராத் அணி, சனிக்கிழமை மதியம் சண்டிகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அகமதாபாத் செல்லத் திட்டமிட்டிருந்தது. ஆனால், பஞ்சாப் மற்றும் சண்டிகர் பகுதிகளில் திடீரெனப் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக விமானம் புறப்பட விமான நிலைய அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதனால் பல மணி நேரம் விமான நிலையத்திலேயே வீரர்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல்தான் குஜராத் வீரர்கள் அகமதாபாத் சென்று அடைந்தார்கள்.

தமது மூன்றாவது ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள குஜராத் அணிக்கு, போட்டி தொடங்குவதற்கு முன்பாகத் தயாராக 24 மணி நேரத்திற்கும் குறைவான காலமே கிடைத்துள்ளது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த புதன்கிழமையே அகமதாபாத் சென்றடைந்துவிட்டது. அங்கு அவர்கள் இரண்டு நாட்கள் தங்கி மைதான சூழலுக்கு ஏற்ப தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆண்டு பிளே-ஆப் போட்டிகளைத் தர்மசாலா, சண்டிகர் மற்றும் அகமதாபாத் என மூன்று வெவ்வேறு நகரங்களில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. இதனால் இறுதிப்போட்டிக்குச் செல்லும் வீரர்கள் அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இது குறித்து பெங்களூரு வீரர் ரஜத் படிதார் கூறுகையில், "முதல் தகுதிச் சுற்றுக்குப் பிறகு எங்களுக்குப் போதிய ஓய்வு கிடைத்துள்ளது. குஜராத் அணி தொடர்ந்து விளையாடி வருவதால் எங்களுக்குச் சற்று சாதகம் இருக்கலாம். இருப்பினும் இரு அணிகளும் பலமானவை என்பதால் போட்டி கடுமையாக இருக்கும்" என்றார்.

இறுதிப் போட்டி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று அகமதாபாத்தில் வானிலை தெளிவாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த 2023-ம் ஆண்டு அகமதாபாத்தில் நடந்த சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு 'ரிசர்வ் டே' வரை சென்றது. அந்தப் போட்டியில் கடைசிப் பந்தில் குஜராத் அணி கோப்பையைத் தவறவிட்டது.

2022-ல் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணி, தற்போது தனது இரண்டாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. ஆனால், பயணக் களைப்பு மற்றும் போதிய பயிற்சி இல்லாதது அந்த அணிக்குப் பின்னடைவாக அமையலாம். சொந்த மண்ணில் விளையாடும் பலம் இருந்தாலும், புத்துணர்ச்சியுடன் இருக்கும் பெங்களூரு அணியை அவர்கள் எப்படிச் சமாளிப்பார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.