📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 23, 2026 04:34 PM

Jana Nayagan Review: மதவெறுப்பிற்கு எதிராகக் களமிறங்கும் நாயகன்; அதற்குள் இத்தனை 'கட்சிப் பிரசாரமா'?

Jana Nayagan Review: மதவெறுப்பிற்கு எதிராகக் களமிறங்கும் நாயகன்; அதற்குள் இத்தனை 'கட்சிப் பிரசாரமா'?

Jana Nayagan Review: மதவெறுப்பிற்கு எதிராகக் களமிறங்கும் நாயகன்; அதற்குள் இத்தனை 'கட்சிப் பிரசாரமா'?

தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த் கேசரி' கதையின் அடிப்படைக் கதாபாத்திரங்களை மட்டும் எடுத்துக்கொண்டு, மாஸ் + மசாலாவை கலந்து கட்டி படமாக விரித்திருக்கிறார் இயக்குநர் அ. வினோத்.

காவல் அதிகாரியாக இருக்கும் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்) கொலை குற்றத்திற்காக ஜெயிலில் இருக்கிறார். அங்கு தளபதிக்கு உதவி செய்யும் காவல் அதிகாரி ஶ்ரீகாந்துடனும் (கெளதம் மேனன்) அவருடைய மகள் விஜியுடனும் (மமிதா பைஜூ) மிகவும் இணக்கமாகிறார். எதிர்பாராத விபத்தில் காவல் அதிகாரி இறந்துவிட, அவருடைய மகள் விஜியைத் தன் மகளாக வளர்க்கிறார் தளபதி.

விஜியை ராணுவ அதிகாரியாக்க வேண்டும் என்பதுதான் அவருடைய தந்தையின் கனவு. ஆனால், சிறு வயதில் ஏற்பட்ட சம்பவத்தால் அவருக்கு 'பியர்ஃபோபியா' என்கிற பயம் உண்டாகும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பயத்திற்குக் காரணம் என்ன, அதற்கும் தளபதிக்கும் என்ன சம்பந்தம், தளபதி யாரைக் கொலை செய்ததற்காக ஜெயிலுக்குப் போனார், அவர் யார் என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இயக்குநர் அ. வினோத் இயக்கியிருக்கும் 'ஜனநாயகன்' திரைப்படம்.

அநீதியைத் தட்டிக் கேட்கத் துணியும் நாயகன் என்கிற க்ளிஷே ஹீரோ கதாபாத்திரம்தான். ஆனால், தன்னுடைய அத்தனை கமர்ஷியல் ஃபார்முலாக்களையும் புகுத்தியிருக்கிறார் விஜய். அலட்டல் உடல்மொழி, முறுக்கிவிட்ட மீசையுடன் சண்டைக் களத்தில் ஆடும் ஆக்‌ஷன், அதற்கு இடையிடையே எமோஷன் எனப் படம் முழுக்க 'கச்சேரி'!

மகளாக மமிதா பைஜூ எமோஷன், ஆக்‌ஷன், தந்தையிடம் செல்லம் கொஞ்சல்கள் என அழுத்தமான கதாபாத்திரத்தில் டிஸ்டிங்ஷனில் தேர்ச்சி பெறுகிறார். ஆனால், சில இடங்களில் எட்டிப் பார்க்கும் மிகை நடிப்பும், வசன உச்சரிப்பும் மட்டும் சின்ன துருத்தல். பாபி தியோலுக்கு வழக்கமான லாஜிக் எல்லைகளற்ற வில்லன் கதாபாத்திரம்.

அதிலும் பெரும்பாலான காட்சிகளில் மிரட்டும் அவர், குறிப்பிடத்தகுந்த பணியைச் செய்திருக்கிறார். ஆனால், லிப் சிங்கில் மட்டும் கொஞ்சம் கவனத்தைக் கொடுத்திருக்கலாம்.

மேலும், நாயகியாகச் சம்பிரதாயத்திற்கு வந்துப் போகிறார் பூஜா ஹெக்டே. கறைபடிந்த கதாபாத்திரத்தில் கரைவேட்டியோடு வரும் பிரகாஷ் ராஜ், அந்தக் கதாபாத்திரம் கோரும் அத்தனை இலாகாக்களுக்கும் பொருந்திப்போகிறார். இவர்களைத் தாண்டி, ரேச்சல் ரெபேக்கா, முத்துக்குமார், பிரியாமணி, நரேன், மோனிஷா பிளசி, டீஜே எனப் பெரும் பட்டாளமே வருகிறார்கள். இவர்களில் ரேச்சல் மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.

பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் ஹியூமனாய்டு ரோபோ சண்டைக் காட்சிகள் தொடங்கி இந்த மாஸ் சினிமாவுக்குத் தேவையான அம்சங்களை விஷுவல்களில் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன். கிராபிக்ஸுக்கேற்ப இடைவெளியைக் கணக்கிட்டுச் சட்டகம் அமைத்திருக்கும் பணிக்கும் குட்!

இழுத்துச் சொல்லப்பட்டிருக்கும் கதைக்கும், இடையிடையே தொகுதிக்குள் வராத பகுதிகளுக்கும் பிரசாரம் செய்யும் காட்சிகளும் கடிவாளம் போடாதது படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவின் எரர்ஸ். 3 மணி நேரம் ஒதுக்கும் அளவிற்கு இத்தனை கருணை ஏன் படத்தொகுப்பாளரே?

அனிருத் இசையில் உருவாகியிருக்கும் மாஸ் பாடல்கள் அனைத்தும் 'வைப் ஆகலாம் வா!' என அழைத்து 'பிளாஸ்ட் பிளாஸ்ட்' குறியீடு போட வைக்கிறது. அதே சமயம், மென்மையான மெலடிகளும் நம் நெஞ்சில் குடிகொள்கிறது. பின்னணி இசையில் விஜய்க்கு சிவப்பு கம்பள வரவேற்பைத் தந்திருப்பவர் சில இடங்களில் நம்மைத் திருப்திபடுத்தாமலும் போகிறார்.

செல்வகுமாரின் கலை இயக்கத்தில் உருவாகியிருக்கும் செட்டுகள் அந்நியமான நிலவியலையே உருவாக்கியிருக்கின்றன. ஆங்காங்கே கிராபிக் காட்சிகளில் இன்னுமே மெனக்கெட்டிருக்கலாம். ஹியூமனாய்டு ரோபோ காட்சிகள் மட்டும் ஆறுதல் தருகின்றன.

ஏஐ பயன்பாடுகளிலும் நேர்த்தி கிடைக்காமல் போயிருப்பது ஏமாற்றம். ஆக்‌ஷன் டைரக்டர் அனல் அரசு வடிவமைத்திருக்கும் சண்டை காட்சிகள் கச்சிதம்.

ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கும் ஒரு சர்வாதிகாரியின் முடிவை எழுதும் நாயகன் என்கிற ஒன் லைனை ஆக்‌ஷன், எமோஷன், செண்டிமெண்ட், அரசியல், அவற்றோடு தவெக பிரசாரம் என அனைத்தையும் சேர்த்து முழு சினிமாவாக மாற்ற முயன்றிருக்கிறார் இயக்குநர் அ. வினோத்.

முதல் பாதியின் பெரும்பகுதி, நமக்குத் தெரிந்த கதையை மட்டுமே விஜய் படத்திற்கான ஸ்டைலில் சொல்கிறது. ஆனால், புதுமையாக ஆங்காங்கே சேர்க்கப்பட்டிருக்கும் விஷயங்களிலும் கதையை இறுக்கமாகக் கொண்டுசெல்லும் பிடிப்பில்லை.

பேன் இந்தியா வில்லன் என அறிமுகமாகும் பாபி தியோல் எபிசோடுகள் மட்டும் லேசாகக் கூர்ந்து கவனிக்க வைக்கின்றன. ஆனால், அவற்றுக்குச் சிறிதளவாவது லாஜிக் சேர்த்திருந்தால் கொஞ்சம் நம்பகத்தன்மை கிடைத்திருக்குமே!

இப்படியான விஷயங்களால் அந்தக் கதாபாத்திரத்தின் வில்லத்தனம், வசனங்களாக மட்டுமே முடிந்துபோகிறது. தளபதி கதாபாத்திரத்தின் ஹீரோயிசம் - விஜியின் பயம் - வில்லனின் சர்வாதிகார எண்ணம் ஆகிய மூன்றையும் இணைக்கும் கதை நம்மைத் தலைசுற்றலிலேயே விடுகிறது. இதனால் மாஸ், எமோஷன் என எதுவும் முழுமையாகக் கிடைக்காமல் நகரும் படம் இடைவேளையில் நம்மைத் தட்டி எழுப்புகிறது.

இரண்டாம் பாதியில்தான், படத்தின் மையக் கதையை இன்னும் விரிவாகச் சொல்கிறது திரைக்கதை. புராஜெக்ட் எம்.எம், அதனுடைய நோக்கம் என்ன, அதனை வைத்துப் பிளவுவாத அரசியலைத் தூண்டுவது, அதற்குச் சமூக வலைதளப் பக்கங்கள் எப்படிப் பங்காற்றுகின்றன ஆகியவை இயக்குநர் அ. வினோத்தின் டீடைலிங் கிளாஸ்!

மதத்தைக் கொண்டு வெறுப்பரசியலை உண்டாக்கும் சம்பவங்கள், ஒரு குறிப்பிட்ட மதத்தினர் மீது திணிக்கப்படும் குற்ற அடையாளம், அதன் வழியாக சமூகத்தில் பிரிவினையை உருவாக்குவது போன்ற முக்கிய அரசியலைப் பேசியதற்குப் பாராட்டுகள். ஆனால், அதே சமயம் இந்தப் படத்திலேயே அத்தகைய காட்சிகளையும், கதாபாத்திர வடிவமைப்புகளையும் பரபரப்பிற்காகப் புகுத்தியது என்ன வகை லாஜிக் வினோத் சார்?

கதைக்குச் சம்பந்தமில்லை என்றாலும் குட் டச் பேட் டச் உரையாடல் ஐடியாவுக்கு லைக்ஸ்! இப்படியாக நகரும் இரண்டாம் பாதியில் மாஸ் சினிமாவுக்குத் தேவையான 'பாட்ஷா' ஃபிளாஷ்பேக், தவெக அரசியலுக்கு இலைமறை காயாகப் பிரசாரம் போன்ற விஷயங்களையும் சேர்த்துச் சொல்கிறது. இவற்றில் சில ரசிக்க வைத்தாலும், மற்றவை திகட்ட வைக்கின்றன.

கிளைமேக்ஸில் வில்லனின் ஹியூமனாய்டு ரோபோ டெக்னாலஜி உள்ளிட்ட காட்சிகள் வடிவமைக்கப்பட்ட விதத்திற்கு தம்ப்ஸ் அப் கொடுக்கலாம். ஆனால், அதற்கும் லாஜிக் துளியும் இல்லையா பாஸ்!?

இப்படியான எழுத்தில் ஏற்பட்டிருக்கும் ஏகப்பட்ட சிக்கல்களால், ஜனநாயகத்தைக் காப்பாற்றும் இந்த ஜனநாயகனைக் கொண்டாட முடியாமல் போகிறது.