📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 29, 2026 12:00 PM

ஜப்பானில் இந்திய வீரர்கள் சாதனை.. ஆசியா

ஜப்பானில் இந்திய வீரர்கள் சாதனை.. ஆசியா

ஜப்பானில் இந்திய வீரர்கள் சாதனை.. ஆசியா - ஓசியானியா 24 மணி நேர ஓட்டப்பந்தயத்தில் சாம்பியன் பட்டம்

டெல்லி: ஜப்பானின் ஹிரோசாகி நகரில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24 மணி நேர ஓட்டப்பந்தயத்தில் (IAU 24-Hour Asia & Oceania Championship) இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் முதல் மூன்று இடங்களையும் தட்டிச் சென்றதோடு, அணி ரீதியாகவும் தங்கம் வென்று ஆசிய அளவில் இந்தியா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

இந்திய தடகள சம்மேளனத்தின் (AFI) கீழ் பங்கேற்ற இந்திய அணி, கடந்த மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்றது. கடந்த 2022 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, தற்போது 2026-லும் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.

ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் இந்திய வீரர் அமர் சிங் தேவாண்டா 24 மணி நேரத்தில் 282.881 கி.மீ. தூரம் ஓடி புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இவர் ஆசிய சாதனையை வெறும் 3 கி.மீ. வித்தியாசத்தில் தவறவிட்டார். இருப்பினும், 2026-ம் ஆண்டில் உலக அளவில் 24 மணி நேர ஓட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சிறந்த தூரமாக இது கருதப்படுகிறது. இவரைத் தொடர்ந்து ஜினோ ஆண்டனி வெள்ளிப் பதக்கமும், சௌரவ் குமார் ரஞ்சன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆண்கள் அணி பிரிவில் இந்தியா மொத்தம் 815.833 கி.மீ. தூரத்தை கடந்து ஆசிய அளவில் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது. இது ஐஏயு (IAU) சாம்பியன்ஷிப் வரலாற்றில் எந்தவொரு ஆசிய நாடும் எட்டாத அதிகபட்ச தூரமாகும். பெண்கள் பிரிவில் டென்சின் டோல்மா 228.939 கி.மீ. ஓடி தேசிய சாதனையுடன் நான்காவது இடத்தைப் பிடித்தார். இந்திய பெண்கள் அணி வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது.

இந்த வெற்றி குறித்து தலைமை பயிற்சியாளர் சந்தோஷ் பத்மநாபன் கூறுகையில், "இந்த தருணத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இது இந்திய அல்ட்ரா ரன்னிங் சமூகத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. வீரர்களின் கடின உழைப்பு மட்டுமின்றி, பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் கூட்டு முயற்சிக்குக் கிடைத்த பலன் இது" என்றார்.