கார்த்தி மீது நாகார்ஜூனாவுக்கு இவ்வளவு பாசமா?.. மொத்தமா தூக்கிட்டாராம்.. எஸ்.ஜே.சூர்யா சொன்ன சீக்ரெட்
சென்னை: கார்த்தி நடிப்பில் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படம் நாளை மறுநாள் (செப் 10) ரிலீஸாகவிருக்கிறது. அதனையொட்டி ப்ரோமோஷன் பணிகள் எல்லாம் முழு வீச்சில் நடந்துவருகின்றன. அந்தவகையில் நேற்று தெலுங்கு மொழிக்கான ப்ரோமோஷன் நடைபெற்றது. அதில் எஸ்.ஜே.சூர்யாவின் பேச்சு நாகார்ஜுனாவுக்கும், கார்த்திக்கும் இடையே இருக்கும் அன்பை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான வா வாத்தியார், மெய்யழகன், ஜப்பான் ஆகிய மூன்று படங்களும் கமர்ஷியல் ஹிட்டடிக்கவில்லை. மெய்யழகன் க்ளாசிக் படமாக இருந்தாலும் வணிக ரேஸில் தோற்றுவிட்டது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். வரிசையாக கமர்ஷியல் வெற்றி கொடுத்த கார்த்தி கடைசி மூன்று படங்களில் திணறியதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. உடனடியாயக பெரிய ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார்கள்.
துணையாக சர்தார் 2: அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கு துணையாக சர்தார் 2 திரைப்படம் இருக்கிறது. இதன் முதல் பாகம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மெகா ப்ளாக் ப்ஸ்டர் ஆனது. 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.எனவே அதன் இரண்டாவது பாகத்தின் மீது பலருக்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. செப்டம்பர் பத்தாம் தேதி (நாளை மறுநாள்) வெளியாகவிருக்கிறது படம். இது கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையை படத்தின் ட்ரெய்லர் விதைத்திருக்கிறது.
இதிலும் முக்கியமான விஷயம்: சர்தார் படத்தின் முதல் பாகத்தில் தண்ணீர் பிரச்னை குறித்து பல விஷயங்களை பேசியிருந்தார் இயக்குநர். அதேபோல் இதிலும் முக்கியமான விஷயம் ஒன்றை தொட்டிருப்பதாக கூறுகிறார்கள். இதில் கார்த்தியுடன் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். இது அவருக்கு 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால் படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார்கள்.
எஸ்.ஜே.சூர்யா பேச்சு: தமிழ்நாட்டில் பெரும்பாலும் ப்ரோமோஷனை கவர் செய்துவிட்டார்கள். இப்போது பக்கத்து மாநிலங்களுக்கு சென்றும் ப்ரோமோஷனில் ஈடுபட்டுவருகிறார்கள். அந்தவகையில் நேற்று தெலுங்கில் நடந்த ப்ரோமோஷனில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, "தோழா படத்தில் கார்த்தியும், நாகார்ஜூனாவும் சேர்ந்து நடித்தார்கள். அந்த ஷூட்டிங்கின்போது சம்பவம் ஒன்றும் நடந்தது. அதை இங்கே சொல்கிறேன். அதாவது அப்படத்தின் ஷூட்டிங் இடைவேளையில் அன்னபூர்ணா (நாகார்ஜூனாவின் ஸ்டூடியோ) ஸ்டூடியோவில் 30 நிமிடங்கள் கார்த்தி சைக்கிள் ஓட்டுவது வழக்கமான ஒன்று.
கார்த்திக்காக செய்தது: அப்படி சைக்கில் ஓட்டிக்கொண்டிருந்தபோது அங்கே இருந்த வேக தடைகளால் கார்த்தியின் கவனம் சிதறியிருக்கிறது. இந்த சம்பவம் நாகார்ஜூனாவின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. உடனே அவர் அங்கே இருந்த வேக தடைகளை அகற்றிவிட்டார். அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே எவ்வளவு தூரம் அன்பும், நெருக்கமான பிணைப்பும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்" என்றார். அவரது இந்தப் பேச்சு பலரிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.