காவிரி பிரச்னை ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல்: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
சென்னை: 'பாஜவுக்கு, தமிழக காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் பாடம் எடுக்க வேண்டாம் என, தமிழக பாஜ, தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின் தான், கடந்த 2018ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது, மாணிக்கம் தாகூருக்கு தெரியுமா? மத்திய பாஜ அரசு அமைத்த ஆணையம், தண்ணீர் வழங்குமாறு உத்தரவிட்டும், கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து விட்டது. இதில், மத்திய பாஜ அரசின் மீது மாணிக்கம் தாகூர் பழிபோடுவது, மக்களை ஏமாற்றும் செயல்.
தமிழக முதல்வர் விஜயை, கர்நாடகாவுக்கு வருமாறு கூறிவிட்டு, பின் சாக்குபோக்கு சொல்லி, கதவை சாத்தி அவமானப்படுத்திய கர்நாடக காங்., முதல்வருக்கு கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதம் பிடிக்கும், காங்., அரசிடம், அத்திட்டத்தை கைவிடுமாறு கூறுவதை விட்டு விட்டு, வீண் விவாதம் வேண்டாம்.
தமிழகத்திற்கு வந்த ராகுல், பற்றி எரியும் காவிரி பிரச்னை குறித்து, ஒரு வார்த்தை கூட பேசாமல் திரும்பி சென்றதில் இருந்தே, காங்கிரசாருக்கு தமிழகத்தின் மீது உள்ள அக்கறை தெரிகிறது.
கர்நாடகாவில் காங்., ஆட்சிக்கு வரும்போதெல்லாம், தமிழக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். எனவே, தமிழக நலன் குறித்து, பாஜவுக்கு மாணிக்கம் தாகூர் பாடம் எடுக்க வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.