📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Technology August 27, 2026 10:03 AM

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி விரைவு தரிசனம் செய்ய வழிமுறை குறித்து ஆய்வு: அமைச்சர் ரமேஷ்

கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி விரைவு தரிசனம் செய்ய வழிமுறை குறித்து ஆய்வு: அமைச்சர் ரமேஷ்

திருவண்ணாமலை: ஆவணி பவுர்ணமி கிரிவலம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று, நாளை நடக்கிறது. இந்நிலையில் அரசு விடுமுறை நாளான நேற்று, காலை முதலே, அக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து அங்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.

பொது தரிசன வரிசையில், பக்தர்களின் நிலையை பார்வையிட்டார். அப்போது பக்தர்கள், 'கிரிவல நாட்களில் சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து வருகிறோம். அதுபோன்ற நாட்களில் விரைவு தரிசனம் செய்ய முடியவில்லை. எளிதில் தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, கோவில் அலுவலகத்தில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின், அமைச்சர் ரமேஷ் அளித்த பேட்டி: கோவிலில் பக்தர்கள், முக்கியமாக கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தவர்கள் விரைவாக தரிசனம் செய்ய, வழிமுறை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உள்ளூர் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய, ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

சிலைகளை புகைப்படம் எடுப்பது, கோவிலுக்குள், 'ரீல்ஸ்', வீடியோ எடுப்பது போன்ற செயல்களை தடுக்கவும், வி.ஐ.பி.,க்கள், அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் கோவிலுக்கு வரும்போது, அவர்களை பக்தர்கள், 'செல்பி', வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் பதிவிடுவதை தவிர்க்கவும், கோவிலுக்குள், மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுகிறது.

பக்தர்கள் அமைதியான முறையில் வழிபடுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நோக்கில், வரும், 1 முதல், அருணாசலேஸ்வரர் உள்பட, 50-க்கும் மேற்பட்ட முதுநிலை கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.