வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர்
வாக்காளர்களுக்கு ரூ.2000 கொடுத்ததை ஒப்புக்கொண்ட தவெக வேட்பாளர் - வீடியோ ஆதாரத்தால் அதிர்ச்சியான தவெகவினர்
தவெக சார்பில் போட்டியிட்டவர் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்தார் என்பதை ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் ஒப்பு கொண்டு பேசிய வீடியோவால் பரபரப்பு.
சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டவர் வாக்காளர்களுக்கு 2000 ரூபாய் பணம் கொடுத்தார் என்பதை ஓமலூர் தொகுதி தவெக வேட்பாளர் ஒப்பு கொண்டு பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தமது தோல்விக்கு காரணமும் அது தான் என்று தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வில்லை என்று திருச்சியில் விஜய் பேசிய நிலையில் அவரது வேட்பாளரே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒப்பு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் அதியமான். இவர் சமீபத்தில் ஓமலூர் தொகுதியில் பணியாற்றிய தவெக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசும் போது, ஓமலூர் தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், ஓமலூர் தொகுதிக்கு அருகில் உள்ள மேற்கு சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட நபர் ( லட்சுமணன் ) வாக்காளர்கள் அனைவருக்கும் 2000 ரூபாய் கொடுத்தது தான் என்றும், இது நமது ஓமலூர் தொகுதியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் இதனால் 6 ஆயிரம் முதல் 10 வாக்குகள் வரை நம்மை விட்டு சென்றதாக பேசியது சர்ச்சையாகி உள்ளது.
தவெக கட்சியில் பணம் கொடுக்காமல் ஜெயித்ததாக திருச்சியில் விஜய் பேசிய நிலையில் தவெக கட்சியை சேர்ந்த வேட்பாளரே வாக்குக்கு பணம் கொடுத்ததை ஒப்பு கொண்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Also Read| திருச்செந்தூரில் நிம்மதியான தரிசனம்.. அமைச்சர் ஆய்வுக்குப் பின் நடந்த மாற்றம்.. வீடியோ வெளியீடு!
சம்பந்தபட்ட வேட்பாளர் கூறிய மேற்கு தொகுதி வேட்பாளர் லட்சுமணன், தேர்தலில் சுமார் 66 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடதக்கது. தவெக வேட்பாளர் ஒருவரே தனது கட்சி வேட்பாளர் வாக்களிக்க பணம் கொடுத்தார் என்பதை ஒப்பு கொண்டதால் இது குறித்து தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றம் சாட்டபட்ட மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், தம் மீது உள்ள வழக்கை மறைத்து உள்ளதாக ஆளுநரிடம் ஏற்கனவே புகார் அளிக்கபட்டு இருப்பது குறிப்பிடதக்கது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி