“மாம்பா மென்டாலிட்டி”.. பண்ட்டின் அறிவுரை.. துருவ் ஜுரல் சதம் அடித்த பின்னணி!
“மாம்பா மென்டாலிட்டி”.. பண்ட்டின் அறிவுரை.. துருவ் ஜுரல் சதம் அடித்த பின்னணி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் அபாரமாக விளையாடி சதமடித்த இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல், மைதானத்தில் ரிஷப் பண்ட்டுடன் பேட்டிங் செய்த தனது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். கூடைப்பந்து ஜாம்பவான் கோபி பிரையன்ட் உருவாக்கிய 'மாம்பா மென்டாலிட்டி' என்ற தாரக மந்திரத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வைத்துள்ள ஜூரல், அதற்குத் தகுந்தாற்போல் இப்போட்டியில் விடாமுயற்சியுடன் விளையாடியதை மறைமுகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார்.
கொழும்பில் நடைபெற்று வரும் இப்போட்டியில், துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 115 ரன்கள் குவித்தார். இந்த ஆட்டத்தின் போது ரிஷப் பண்ட்டுடன் இணைந்து கூட்டணியாக 112 ரன்கள் சேர்த்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் பண்ட் 63 ரன்கள் எடுத்தார். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த துருவ் ஜூரல் பேசுகையில், "ரிஷப் பண்ட் எவ்வளவு சிறந்த வீரர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மண்ணில் அவர் இந்தியாவிற்காகச் செய்த சாதனைகள் அதிகம். அவர் களத்தில் இருக்கும் போது நான் எப்போதும் அவரிடம் ஆலோசனைகளைக் கேட்பேன். குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் தான் கேட்டுத் தெரிந்துகொள்வேன்" என்றார்.
பண்ட்டின் அதிரடி ஆட்டத்தை போல ஆட முயல்கிறீர்களா என்ற கேள்விக்கு, "டெஸ்ட் கிரிக்கெட்டை பல்வேறு வழிகளில் விளையாடலாம். பண்ட்டைப் போல் என்னால் விளையாட முடியாது, அது அவரது தனித்துவமான பாணி. நாங்கள் இருவருமே விக்கெட் கீப்பர்கள் மற்றும் மிடில் ஆர்டரில் களம் இறங்குவதால், அவருடன் பேட்டிங் செய்வது ஒரு சிறந்த அனுபவம்" என்று ஜூரல் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது 100 வது ரன் மற்றும் கொண்டாட்டம் குறித்துப் பேசிய ஜூரல், "99 ரன்களில் இருந்த போது இலங்கை வீரர்கள் கச்சிதமாக பந்து வீசினர். அசிதா பெர்னாண்டோ பந்துவீச்சில் நான் அடித்த ஷாட்டில் ரன் ஓடி, டைவ் அடித்துத் தான் சதத்தை எட்டினேன். அப்போது சிறிது பதற்றமடைந்தேன். மேலும், எனக்காக 29 பந்துகளை எதிர்கொண்டு விக்கெட்டைக் தக்கவைத்த முகமது சிராஜுக்கு என் நன்றிகள்" என்று கூறினார்.